Wednesday, July 3, 2013

மன்னிப்பாயா??

நீர்த்துப்போன போராட்டங்களும்
நிம்மதி கெடுக்கும் உன் நித்திரைகளும்
மறந்தும் மரத்தும் போன எங்களின் மானங்கெட்ட மனங்களை
மரணமும் தின்னாதோ?

பி.கு:
தினமும் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் ஆயிரம் ஆயிரம் பெண்களுக்கும், செய்தி ஆக்கி அவர்களை விற்கும் செய்தி நிறுவனங்களுக்கும்,அதை படித்து விட்டு ஐந்து நிமிடங்களில் மறந்து போகும் என்னை போன்ற சுய நலவாதிகளுக்கும் இந்த கவிதை அர்ப்பணம்

Saturday, May 19, 2012

கொள்ளிவாயனும் உடைந்த சத்தியங்களும்!!



பகுதி-1:ஒரு இரவின் கதை

மூன்று அடுக்குகளும் நானுற்றி இருபது அறைகளும் கொண்டது அந்த தனியார் பொறியியல் கல்லூரியின் ஆண்கள் விடுதி. இரவு பனிரெண்டு மணிக்கும் அனைத்து அறையிலும் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. பெரும்பாலான மாணவர்கள் பரபரப்புடன் படித்துக்கொண்டிருந்தனர். படிப்பு தலையில் ஏறாதவர்கள் கடமைக்கு புத்தகத்தை கையில் வைத்திருந்தனர். சிலரோ எந்திரன் ரஜினி போலவும் படிக்க முயற்சித்துக்கொண்டிருந்தனர். அந்த பெரிய விடுதியில் இரண்டு அறைகளில் மட்டும் வெளிச்சம் இல்லை. ஒன்று,மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டதால் இரண்டு வருடங்களாக மூடியிருக்கும் அறை.இரண்டாவது அறையில் தான் கதிரவன் இருந்தான்.இருட்டில் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பான் என்று அவனுக்கே தெரியவில்லை.கதவு அருகில் யாரோ வருவது போல இருந்தது. அவனாக தான் இருக்கவேண்டும். வேகமாக கதவை திறந்தான். அவனே தான்! கார்த்திக்.


மச்சான் ஒருத்தன் கிட்ட கூட இல்லையாம்.


இருந்தாலும் கொடுக்கமாட்டானுங்க.


நீ கொடுப்பியா?காலையில பரீட்சைய வைச்சுகிட்டு நீ கொடுப்பியா?


கதிரவன் இல்லையென தலையசைத்தான்.


இப்படி ஆகும்னு நான் நினைக்கல கார்த்தி. இன்னும் ரெண்டு பில்டர் வாங்கியிருந்தா சரியா இருந்திருக்கும்.


பேசாத எனக்கு பைத்தியம் பிடிக்கப்போகுது


சிகரட் சரி ஒரு பீடி கூடவா கிடைக்கல


கட்டை பீடி கூட கிடைக்கல. கினமெடிக்சாவது!மண்ணாவது! நான் தூங்கப்போறேன். நாளைக்கு உனக்கு என்ன?


டி.எஸ்.பி


தேவி ஸ்ரீ பிரசாத்தா? 


ரொம்ப கேவலமான மொக்கை. டிஜிட்டல் சிக்னல் பிராஸசிங். அதுக்கு இன்னொரு பெயர் டிகிரி ஸ்டாப்பிங் பேப்பர்.


அப்போ நீயும் கான்வக்கேஷன்ல டிகிரி வாங்கப்போறதில்ல . குட் நைட் மச்சி.


கார்த்திக் போய்விட்டான் ஆனால் கதிரவனுக்கு தூக்கம் வரவில்லை. கண்ணை மூடினால் ஸ்வாதியின் நியாபகம் வந்தது. ஸ்வாதியும் அவனும் ஒரே வருடம் தான் கல்லூரியில் சேர்ந்தனர். அந்த பேட்சிலே அழகான பெண் அவள் தான். அதனால் அவளுக்கு ஒரு ரசிகர் மன்றமே உருவானதில் ஆச்சரியம் இல்லை ஆனால் அந்த கூட்டத்தில் கதிரவனும் சேர்ந்தது அவனுக்கே ஆச்சரியம் தான். அவளோ இவர்களில் ஒருவனை கூட இன்று வரையில் மனிதனாக கூட பார்த்ததில்லை.

ஸ்வாதி அவனை பார்த்து மயங்குவதற்க்கு அவனிடம் ஒன்றுமில்லை என்று அவனுக்கே தெரியும். படிப்பு முடியும் முன் ஒரு வேலை கிடைத்து விட்டால் அவளிடம் காதலை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாவது கிடைக்கலாம்.

"ஹலோ ஸ்வாதி நான் கதிரவன். பைனல் இயர் ஐ.டி . ஒரு அரியர் வைச்சுருக்கேன் . நான் உன்னை நாலு வருசமா காதலிக்குறேன்".


"ஹலோ ஸ்வாதி நான் கதிரவன். பைனல் இயர் ஐ.டி . முடிச்சவுடனே டி.சி.எஸ்'ல ஜாய்ன் பண்றேன். நான் உன்னை நாலு வருசமா காதலிக்குறேன்".

இந்த இரண்டையும் சொல்வதிலேயே வித்தியாசம் தெரிகிறது அல்லவா? காதலை வெளிப்படுத்த ஒரு வேலை வேண்டும். வேலை கிடைக்க அரியரை க்ளியர் பண்ணவேண்டும் அதற்கு படிக்கவேண்டும். அதற்கு கண்முழிக்க வேண்டும். இளைய தளபதி சொன்னது போல் வாழ்க்கை வட்டமாக தான் இருக்கவேண்டும். எதை சிந்தித்தாலும் மனம் இறுதியில் ஒன்றை தான் சுற்றிக்கொண்டிருந்தது. ஒரு சிகரெட். வெறுப்புடன் மெத்தையில் புரண்டபோது தான் தலையனை அடியில் வைத்த கடவுள் படம் கையில் சிக்கியது.

கடவுளே ஒரு சிகரெட்டோ பீடியோ இன்னிக்கு கொடு . நாளையிலிருந்து இந்த கருமத்த விட்டுடுறேன். இது நான் நாளைக்கு எழுதப்போற பரீட்சை மேல, எனக்கு கிடைக்கப்போற வேலை மேல,ஏன் என் காதல் மேல கூட சத்தியம்.

அவனுக்கே சிரிப்பாக தான் இருந்தது. பீடி கொடுக்க கடவுள் என்ன ஹாஸ்டல் வாட்ச்மேனா?

மூஞ்சி கழுவிவிட்டு வரலாமென தோன்றியது அவனுக்கு. பாத்ரூம் அருகே விடுதியை சுத்தம் செய்யும் பணியாளர்கள் எவ்வித கவலையுமின்றி உறங்கிகொண்டிருந்தனர். அதில் ஒருவனது மேல் சட்டை பாக்கெட்டில் இரண்டு பீடிகள் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. சுற்றிலும் ஒருமுறை பார்த்தான் கதிரவன் அந்த காரிடரில் அவனைத்தவிர வேறு யாருமில்லை. கை செய்யப்போகும் வேலையை நினைத்து மனமும் நடுங்கியது. நாளைய இந்தியாவின் தூண் ஒரு பீடிக்காக தவறு செய்யலாமா? என மண்டைக்குள் கேள்வி கிளம்பியது. தலையை தட்டிவிட்டு தன் வாழ்வின் முதல் திருட்டை செய்தான் அவன். பீடி கைக்கு வந்தவுடன் விடுவிடுவென அறைக்கு சென்று தாளிட்டான். பீடியை வாயில் வைத்து தீக்குச்சியை பற்ற வைத்தபோது மனம் சொல்லியது " பீடியின் வெளிச்சம் வாழ்க்கையிலும் சீக்கரமே வரும்".





Friday, March 9, 2012

இருளப்பனின் காதல் கடிதம்!!



நெற்றியில் வழியும் வியர்வையை துடைத்தபடி கோப்புகளை பார்த்துக்கொண்டிருந்தார் முத்துக்குமார்.

"ஐயா உங்களுக்கு கடுதாசி வந்திருக்கு" என பணிவுடன் நீட்டினான் அவரது உதவியாளன் முனுசாமி.

அனுப்புனர் பெயர் இருளப்பன் என குறிப்பிடப்பட்டிருந்தது. யார் இந்த இருளப்பன் என யோசித்துக்கொண்டே கடிதத்தை பிரிக்கத்தொடங்கினார் அவர்.


 மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,
                           
                                                          உங்கள் மீது பாசமும் பற்றும் கொண்ட இருளப்பன் எழுதுவது. இது என் நிஜப்பெயர் அல்ல. நான் ஏன் இந்த பெயரை உபயோகப்படுத்துகிறேன் என உங்களுக்கு போகப்போக புரியும். என் காதலை தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த கடிதம்.
                                                         
                                                        என் பக்கத்து வீட்டில் வசிக்கும் மைனா(இதுவும் புனைப்பெயர் தான்) மீது எனக்கு ஒரு உய்யா(காதல்). ஆனால் அவளுக்கும் எனக்கும் நேரடி அறிமுகமே இல்லை. அவளெல்லாம் எனக்கெங்கே கிடைக்கப்போகிறான் என்ற சோகத்துடன் என வாழ்க்கை ஓட்டிக்கொண்டிருந்த போது தான் எங்கள் தெருவில் இரண்டு மணி நேரம் மின்சாரம் தடைபட தொடங்கியது.மெகா சீரியல் பார்க்கும் வாய்ப்பை இழந்த என் அம்மாவும் அவள் அம்மாவும் எங்கள் தெருவில் நடக்கும் மெகா சீரியல்களை பற்றி என் வீட்டில் உட்கார்ந்து பேசத்தொடங்கினர்.
                                                     
                                                         ஒரு மாதம் கழிந்திருக்கும்.இப்போது ஐந்து மணி நேரம் மின்சாரம் தடை. தடையில்லா மின்சார சேவையும்(U.P.S) பல்லை காட்டிவிட்டதால் புரளி பேசும் பெண்கள் சபையில் மைனாவும் வந்து சேர்ந்தாள். சபை எங்கள் வீட்டில் நடப்பதால் அவ்வப்போது நானும் அங்கே தலைகாட்டி மைனாவுடன் அறிமுகமானேன். என் அதிர்ஷ்டத்தை என்னாலேயே நம்பமுடியவில்லை. அடுத்த மாதமும் வந்தது.
                                                   
                                                       எட்டு மணி நேர மின்சாரத்தடை. என் வாழ்க்கையின் வசந்த காலம் அது தான். கைபேசிகளும் ஐபாட்களும் சார்ஜ் இல்லாமல் செத்துப்போயின. புரளிகளும் புத்தகங்களும் புளித்துப்போன நிலையில் வேறு வழியில்லாமல் அவளும் என்னை காதலிக்க ஆரம்பித்தாள். இப்போது மின்சாரம் இல்லையெனில் அவள் அம்மாவுடன் என் வீட்டுக்கு வருவதில்லை . நாங்கள் தான் இப்போது தனி சபை அமைத்து விட்டோமே!!
                                                 
                                                      தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன, குழந்தைகள் பரீட்சைக்கு படிக்க வழியில்லை என்றெல்லாம் உங்களை குறை சொல்பவர்கள் தான் அதிகம். ஆனால் உங்களாலும் நன்மைகள் நடக்கிறது எனபதை நீங்கள் அறிந்து கொள்ளவே இந்த கடிதம். தெருவை இருட்டாக்கி என் வாழ்க்கயை வெளிச்சம் ஆக்கிய வள்ளலே நீங்கள் வாழ்க!!
                                                                                                                 
                                                                                          என்றும் அன்புடன்,
                                                                                         இருளப்பன்.


கடிதத்தை படித்துவிட்டு முனுசாமியிடம் நீட்டினார் தமிழக மின்சாரவாரியத்தலைவர் முத்துக்குமார்.

"என்ன சார் இப்படி எழுதிருக்கு?" என்ற படி கடிதத்தை புரட்டினான் அவன்

"எவனோ வேலை இல்லாதவன் பொழுது போக்குக்கு எழுதி இருக்கான். அதை தூக்கி குப்பையில போடு."

அதே நேரம் விளையாடச்செல்வதாக வீட்டில் கூறிவிட்டு இருளப்பனும் , தோழியின் வீட்டுக்கு படிக்கச்செல்வதாக கூறிவிட்டு முத்துக்குமாரின் மகள் மைனாவும் முதன்முறையாக இணைந்து சினிமாவுக்கு போயினர்.


                                                                                                                முற்றும்.
                                                           


Monday, January 9, 2012

காலன் காலிங்- 4


வாழ்க்கையில் நாம நினைக்குறது எப்பவுமே நடக்குறது இல்லைனு அன்னிக்கு தான் நான் புரிஞ்சுக்கிட்டேன். அர்த்தம் இல்லாததா கூட இருக்கலாம் ஆனா அன்னிக்கு என் வாழ்க்கையே முடிஞ்சதுனு நினைச்சேன்.அப்படி நடக்கல. ரெண்டு விஷயம் என்னை காப்பாத்துச்சு.
முதலாவது, என் அப்பா கிட்ட ஓரளவு பணம் இருந்தது அதுவும் போலிஸ் காரங்க வாயை மூடுற அளவுக்கு 2. ரெண்டாவது இறந்து போன ஆளோட மனைவி. சின்ன பையன்னு என்னை மன்னிச்சது மட்டுமில்ல ஒரு பைசா பணத்தை கூட அவங்க தொடலை. அவங்க எதுக்கு என்னை மன்னிக்கனும்?

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்"

இந்த திருக்குறளை நான் அனுபவபூர்வமா தெரிஞ்சுகிட்டேன்.

வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசாதீர்
எதிர்முனையில் அழைப்பது காலனாகவும் இருக்கலாம்.

சாலையோரம் இருக்கும் ஹோர்டிங்கள் எனக்காகவே எழுதின மாதிரி இருந்தது. சின்ன சின்ன விஷயங்கள் தான் ஆனா இதை தெரிஞ்சுக்கிறதுக்கு நான் கொடுத்த விலை ரொம்ப அதிகம். ஆமா விலை ஒரு உயிர்.

சில மாதங்களுக்கு பிறகு...........

இப்போ நான் லைசன்ஸ் எடுத்துட்டேன். போன வாரம் மதுவை பக்கத்துல் உட்காரவைச்சு ஓட்டினேன் . என்னிக்காவது ஒரு நாள் எனக்கு தைரியம் வரும் போது அந்த அம்மாவை பாக்கனும்.  இன்னிக்கு காலையில வெங்கடாசலத்தை பாத்தேன். இப்போ அவன் பெட்ரோல் பங்க்ல வேலை பாக்குறான். என்னை பாத்ததும் திகைச்சு நின்னான் உடனே சுதாரிச்சுட்டு பேசனும்னு சொன்னான்.

மன்னிச்சுக்க தம்பி.
எதுக்கு நா?
நீ செல்போன் பேசுனதை நான் சொல்லிருக்க கூடாது.பயத்துல சொல்லிட்டேன்.
பரவாயில்ல விடுங்க.
என் மேல கோபம் ஒன்னும் இல்லையே?
புருஷனை கொன்னவனை மன்னிக்குறவங்க இருக்கும் போது இதை நான் ஒரு விஷயமா கூட எடுத்துக்ககூடாது.
அவ எப்பவுமே அப்படி தான் தம்பி. சரி நான் வர்றேன்.

வெங்கடாசலம் கிளம்பி விட்டான். நானும் தான். ஆனால் மனதின் ஓரம் ஒரு கேள்வி.


எதுக்கு சம்பந்தமே இல்லாம இத்தனை நாள் கழிச்சு மன்னிப்பு கேக்குறான்? அவ எப்பவுமே அப்படி தான் .அப்போ அவங்களை வெங்கடாசலத்துக்கு முதல்லயே தெரியும். அதை சொன்னப்ப அவன் மூஞ்சியில இருந்த சோகம் அன்னிக்கு அவனோட காதல் தோல்விய சொல்லுறப்ப இருந்த அதே சோகம். மை காட் அவங்க தான் வெங்கடாசலம் காதலிச்ச பொண்ணு.


ஸிட். அன்னிக்கு என்ன நடந்துச்சு? நான் தான் ஆக்சிடன்ட் பண்ணேனா? ஏன்னா உங்களுக்கு தெரியும்ல டிரைவிங் ஸ்கூல் வண்டியில ரெண்டு பக்கமும் ஆக்ஸிலரேட்டர், பிரேக் இருக்கும்னு?
 
                                                             முற்றும்.
                                                                                                                          என்றும் அன்புடன்,
                                                                                                                           ச.கார்த்திகேயன்.



                                                                                                                                                                                               

Sunday, December 25, 2011

காலன் காலிங்-3


தலையில் கைவத்தபடி காவல்நிலைய வாசல்ல உட்கார்ந்திருந்தேன். இப்போ வலி கொஞ்சம் கம்மி ஆகியிருந்தது. வெங்கடாசலம்
உள்ள போயி பத்து நிமிஷம் ஆச்சு. நான் மது போட்டோவை பாத்துட்டு இருந்தேன். வேற எதைப்பத்தியும் நினைச்சு பாக்கக்கூட பயமா
இருந்திச்சு. கொஞ்ச நேரத்துல என்னையும் உள்ள கூப்பிட்டாங்க. முட்டிக்கு முட்டி தட்டுவாங்களோ? ஆனா அப்படி எதுவும் நடக்கல.
என்னை உட்காரும்படி அங்க இருந்தவர் சைகை காட்டினார்.

உன் பேரு என்ன?
ரஞ்சித் சார்.
ஓ உன் பேரே ரஞ்சித் சாரா?
இல்லை நான் ரஞ்சித். சார்னு உங்களை தான் சொன்னேன்.
என்னை இப்படி பணிவா பேசுனா விட்டுருவேன்னு நினைச்சியா?

நான் பதில் ஒன்னும் சொல்லல. என்ன சொல்லனும்னு தெரியல. தப்பா ஏதும் சொல்லிட்டா அடி விழுமோனு பயமா இருந்திச்சு.

என்ன பண்ணுற?
பி.இ சார்.
எந்த காலேஜ்?
சுகந்தி காலேஜ் ஆப் இஞ்சினியரிங் சார்.
சரி ஆக்ஸிடன்ட் எப்படி ஆச்சு?
அவர் திடீர்னு உள்ள வந்துட்டார். எனக்கு கண்ட்ரோல் கிடைக்கல.
போன் பேசுனியாமே?
இல்ல சார்.
பொய் பேசுன தா**  பல்ல பேத்துடுவேன். சொல்றா
போன் வந்துச்சு சார் ஆனா பேசல.
போன் வந்தா வண்டியை ஓரமா நிறுத்திட்டு பாக்க வேண்டியது தானே? அப்படி என்ன அவசர ***?  அவசரத்துக்கு வண்டிய நிறுத்தத்தெரியாதஅந்த ஆஹாவலி ** ஒரு ட்ரெயினர் வேற. போயி அப்படி ஓரமா உட்காரு. ரைட்டர் சார் எப்.ஐ.ஆர் இன்னும் போடலைல? கொஞ்சம் வெயிட்பண்ணுங்க.

அந்த ஓரத்தில் வெங்கடாசலம் கந்தலான துணி போல கிடந்தான். நான் அவன் பக்கத்துல போயி உட்கார்ந்தேன். அப்போது தொலைபேசி  ஒலித்தது. இந்த முறை காவல்நிலைய தொலைபேசி. பேசிவிட்டு இன்ஸ்பெக்டர் வெளியே கிளம்பினார்.

ஏட்டு. அக்யூஸ்ட பத்திரமா பாத்துக்கங்க. நான் ஜி.ஹெச் வரை போயிட்டு வந்துடுறேன்.
என்ன சார் ?
இந்தா இஞ்சினியர் சார் அடிச்சு தூக்குனார்ல அவன் செத்துட்டானாம்.

என்னை முறைச்சு பாத்துட்டு அவர் வெளிய போயிட்டார். நான் தான் உள்ள போகப்போறேன். களி திங்கனும். கல் உடைக்கனும். நான் திரும்ப வெளிய வரும் போது மதுமிதாவுக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்து ஆண்ட்டியாக மாறியிருப்பாள். பாரதி ஏதாவது மோட்டார்
கம்பெனியில் பெரிய பதவியில் இருப்பான். வெங்கடாசலம் ஜெயில்லயே செத்துப்போயிருவான். நான் வெளிய வந்து படிப்பு, காதல் எதுவுமே கை கூடாத இன்னொரு வெங்கடாசலமாக மாறியிருப்பேன்.

Thursday, October 13, 2011

காலன் காலிங் -2

என் டார்லிங்க அசத்தனுங்கிறதுக்காக தான் தினமும் சாயங்காலம் ட்ரைவிங் க்ளாஸ் போக ஆரம்பிச்சேன். பாவம் நான் சாயங்காலம் ஷட்டில் ஆடுறதா நினைச்சிட்டு இருக்கா, திடீர்னு ஒரு நாள் அவ முன்னாடி கார் ஓட்டிட்டு போய் நின்னா என்ன பண்ணுவா? முதல்ல ஷாக் ஆயிருவா அப்புறமா ஏதாவது கிடைக்கும். நான் கிஃப்ட சொன்னேன்! அந்த நினைப்பே எனக்கு ட்ரைவிங் கத்து கொடுத்துச்சு. வெங்கடாசலத்துக்கும் இதுல கொஞ்சம் பங்கு இருக்கு. வெங்கடாசலத்தை உங்களுக்கு தெரியாதுல? அவன் தான் என் ட்ரைனர். ஏதோ நினைப்புல எப்பவுமே சில கேரக்டர்கள் சுத்திட்டு இருக்குமே அவனும் அந்த வகையறா தான்,மத்த படி அவனை பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்ல .

அன்னிக்கும் எல்லா நாளும் மாதிரி தான் ட்ரையினிங் போயிருந்தேன். நானும் வெங்கட்டும் (பெரிய பெயரா இருக்கு. ஒவ்வொரு தடவை சொல்லவும் கடுப்பா இருக்கும் காரணத்தால் இனி வெங்கடாசலம் "வெங்கட்" என அழைக்கப்படுவார்) தான் போனோம். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் என் போன் மணி அடிக்க ஆரம்பிச்சுருச்சு.மது தான். பொய் சொன்னா கண்டுபிடுச்சுடுவா அதனால பேசலாமா ? வேணாமானு நான் முடிவு பண்றதுக்கு முன்னாடி கட் ஆயிருச்சு.

"தம்பி போன் பேசறதுனா ஓரமா நின்னு பேசுங்க. வண்டி ஓட்டும் போது கவனம் ரோட்டுல..."


வெங்கட் சொல்லி முடியும் முன் மீண்டும் மது போன் செய்து விட்டாள். அவன் ஓரக்கண்ணால் அவ காண்டக்ட் பிக்சரை சைட் அடிப்பது எனக்கு தெரிந்தது . வெடுக்கென கட் செய்து விட்டேன்.

"யாரு தம்பி உன் ஆளா?"

நான் பதிலேதும் சொல்லாமல் 'ஆம்' என்பது போல தலையை மட்டும் ஆட்டினேன்.

"நானும் ஒரு பொண்ணை காதலிச்சேன் ஆனா அவளை ஒருத்தன் ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டான்."

ஓ தலைவர் தேவதாஸா? ஏன் மூஞ்சில சாணி அப்புன மாதிரியே சுத்திட்டு இருக்கான்னு யோசிச்சதுக்கு காரணம் கிடைச்சிருச்சு. ஒரு இடைவெளி விட்டு அவனே தொடர்ந்தான்.

"தினமும் அவளை இன்னொருத்தன் பொண்டாட்டியா பாக்கிறது நரகம்யா"

அதுக்கு மேல அவனால சொல்ல முடியல . கண்ணெல்லாம் கலங்கிருச்சு. திரும்பவும் போன் அடிச்சுச்சு .மது தான் . உன்னை நான் எப்பவும் மிஸ் பண்ண மாட்டேன் மதுனு நினைச்சுட்டே அவ போட்டோவ பாத்துக்கிட்டே அட்டெண்ட் பண்ணும் போது

"தடார்".

இடிச்சவுடனே எனக்கு ஒன்னும் புரியல. வேகமா நானும் வெங்கட்டும் கீழ எறங்கினோம் அதுக்குள்ள சுத்தி கூட்டம் வேற கூடிருச்சு. கூட்டத்துக்கு நடுவுல தலையில ரத்தம் வழிஞ்ச படி ஒருத்தன் கெடந்தான்.

"குருட்டு*** போன் பேசிட்டே வந்து தூக்கிட்டான்யா"

"தண்ணி அடிச்சிருக்கானா? ஊது டா"

என்ன செய்றதுனு தெரியாம நின்னப்ப பின்னந்தலையில ஒரு அடி விழுந்துச்சு. சுதாரிக்கும் முன்னாடி ஒரு நாலைஞ்சு பேரு சேர்ந்து என்னை அடிக்க ஆரம்பிச்சுட்டானுங்க . தடுக்க வந்த வெங்கட்டுக்கும் தர்ம அடி விழுந்துச்சு. வண்டியில் அடி பட்டவனை போலவே தலையில் ரத்தம் வழிந்த படி நானும் தரையில் விழுந்தேன்.

Monday, September 5, 2011

காலன் காலிங்-1

கல்யாணம் முடிஞ்சு ஹனிமூன் போகும் போது டிரைவரை கூட்டிட்டு வரப்போறியா இல்லை என்னை ஓட்டச்சொல்லபோறியா?

மலேசியாவுக்கு கார்ல போகமுடியாது டார்லிங்.

உன்னை கார் ஓட்ட சொல்லக்கூடாதுனு தானே மலேசியா போகலாம்னு சொல்ற?

பெருத்த அவமானம். இன்னும் ரெண்டு மாசத்துல நல்லா கார் ஓட்டி ஓட்டுனர் உரிமம் எடுத்து உன்னை ஒரு ரொமண்டிக் ட்ரைவ் கூட்டிட்டு போகலைனா...

போகலைனா?

நீ என்னை கூட்டிட்டு போ

தூ

என்ன வாய்க்குள்ள கொசு போயிருச்சா?

மொக்கை. நான் நூலகத்துக்கு போறேன் அப்புறம் போன் பண்றேன்

ஓகே டார்லிங் .பை

கார் ஓட்டத்தெரியாம இருக்கிறது ஒரு குற்றமா? இவ்வளவு நேரமா என் கிட்ட பேசிக்கொண்டிருந்தது என் டார்லிங் மதுமிதா. கோவை அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு மென்பொருள் தொழில்நுட்பம் படிக்கிறாள். கவிஞர்கள் பாஷை வராத காரணத்தால் என் சொந்த வர்ணிப்பில் அவ"செம ஹோம்லியான பிகரு". நானும் அதே கல்லூரி அதே ஆண்டு தான் ஆனால் துறை மட்டும் இயந்திரவியல். முதல் வருடமே உன் நம்பர் கேட்டு சீனியர்கள் ராகிங் செய்கிறார்கள் என்று கெஞ்சி வாங்கி அது அந்த வீணாப்போன சீனியர்களுக்கு தெரிந்து உண்மையிலே நம்பர் கொடுக்கும்படி என்னை டார்ச்சர் செய்து "அடிச்சும் கேப்பாய்ங்க சொல்லிறாத"னு நாலு அடியையும் தாங்கி , ச்சே பயபுள்ள நமக்காக அடி வாங்குறானேனு அவளும் உருகி அப்படி தான் என் காதல் பயணம் தொடங்கியது. இந்த கார் ஓட்டுற ஒரு விஷயத்த தவிர மிச்ச எல்லாத்துலயும் நாங்க " மேட் ஃபார் ஈச் அதர்".

மச்சி போர்டு பிகோ சூப்பர் டா

கையில் இந்த மாத ஆட்டோ கார் நாளிதழுடன் உள்ளே நுழைந்தான் பாரதி. என் ரூம் மேட். எங்க கல்லூரி " சொசைட்டி ஆப் ஆட்டோமோட்டிவ் இஞ்சினியர்ஸ்" பிரசிடன்ட். பொண்ணுங்க, சினிமா, சரக்கு, கார் அல்லது பைக். இது தான் வழக்கமா பசங்க பேசுற வரிசை ஆனா இவனுக்கு மட்டும் அப்படியே ரிவர்ஸ்ல போகும்.


புன்ட்டோ முன்னாடி இதெல்லாம் நிக்குமா?

அதெல்லாம் ஒரு வண்டியா? சாதாரணமா ரோட்டுல போகும் போதே கீழே தட்டுதே

சாலிட் வண்டி பிரசிடன்ட். 130ல போய் பிரேக் போட்டேன் . எப்படி கச்சுனு நின்னுச்சுனு தெரியுமா?

என்னடா சொல்லுற? நீ கார் ஓட்டுனியா?

அட நம்புங்க பாஸ். தில் இருந்தா சொல்லுங்க ஒரு ரேஸ் வைச்சுக்கலாம்.


அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை என்பது அவன் முகத்திலே தெரிந்தது.


நீட் பார் ஸ்பீட்- ஹாட் பர்ஸ்யூட். மோதி பாக்கலாம் வர்றியா?

தூ.


ஆளாளுக்கு துப்புறானுங்களே. அடுத்த மாசம் வர்ற ஸ்போர்ட்ஸ் மீட்ல எச்சி துப்புற போட்டிய அறிமுகப்படுத்தலாம் போலவே.
அடுத்து நான் பண்ணப்போற வேலைய பாத்ததுக்கு அப்புறம் இவனுங்க மூஞ்சிய எங்க வைச்சுக்க போறாங்கனு எனக்கு தெரியல.


Saturday, May 21, 2011

பற்றும் வரவும் காதல்!

பற்றில் இதயம் வைத்தேன்
வரவில் வலியை வைத்தேன்
உறவில் உன்னை வைத்தேன்
உயிரில் காதல் வைத்தேன்!

இரவில் கனவுகள் சுமந்தேன்
பகலில் நினைவுகள் சுமந்தேன்
இரண்டிலும் உன்னை சுமந்தேன்!

நிலவுக்கு எட்டி குதித்தேன்
வானை எட்டவுமில்லை
பூமி கிட்டவுமில்லை
காதலின் உலகத்தில் நான் திரிசங்கானேன்!

Saturday, March 5, 2011

வார்த்தை ஒன்னு


கை பேசியில் தகவல் வந்த ஒலியில் தூக்கம் கலைந்தாள் தாமரை.

"ஐ லவ் யூ. என்ன முடிவு பண்ணியிருக்க? இப்போது கூப்பிடவா?"

குறுந்தகவல் அனுப்பியிருந்தது ரவீந்திரன்.அவளது காதலன்.

வேணாம். அவர் குளிச்சிட்டு இருக்கார். இன்னிக்கு சொல்லிடலாம்.
எதுக்கு அவன் கிட்ட சொல்லிட்டு ? பிரச்சனை ஆயிர போது!
எங்க அப்பா அம்மா பண்ண தப்புக்கு இவருக்கு நாம துரோகம் பண்ணக்கூடாது.
என்ன லாஜிக்கோ?
சரி நான் அப்புறம் கூப்பிடறேன்.

உள்ளே அவளது கணவன் தினேஷ் குளித்துக்கொண்டிருந்தான்.

நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் . கல்யாணத்துக்கு முன்னாடியே இதை சொல்ல முயற்சி பண்ணேன் ஆனா சொல்ல முடியல. நான் ஒருத்தரை காதலிக்கிறேன்.

குளியலறை கதவு திறக்கவே தனது ஒத்திகையை நிறுத்திக்கொண்டாள்.
குட் மார்னிங்க். என்ன டல்லா இருக்க?
அதெல்லாம் இல்ல.
எனக்கு நாளைக்கு கொடைக்கானல்ல ஒரு மீட்டிங் இருக்கு.நீயும் வா

முதலில் தயக்கம் தோன்றினாலும் தனியே சொல்வதற்க்கு இதை விட்டால் வேறு தருணம் தோன்றாது என தோன்றவே ஒப்புக்கொண்டாள்.விருப்பமில்லாத திடீர் கல்யாணம், கல்யாணம் முடிந்தபின் வந்து கெஞ்சும் காதலன், கடைசி வரை காதலை காதிலும் வாங்க மறுத்த பெற்றோர், இப்போது ஒரு அன்னியன் கணவனாக. இவனாவது சொல்வதை புரிந்து கொள்வானா?

பயணம் முழுவதும் இருவருமே பேசிக்கொள்ளவில்லை. அவன் கைபேசியில் யாரிடமோ கதைத்து கொண்டிருந்தான். அவள் அவனிடம் கண்களை மூடிக்கொண்டு மனதில் அவனிடம் சொல்லப்போகும் காட்சியை ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தாள். விருந்தினர் மாளிகையை அடைந்த போது அவள் உறங்கிவிட்டிருந்தாள்.குளிரில் நடுங்கியவாறே போய் மெத்தையில் விழுந்தது தான் அவள் நினைவில் இருந்தது.

கனவிலும் அதே காட்சி தான் ஒடிக்கொண்டிருந்தது.

போர்வையை யாரோ உருவுவது போல் இருக்கவே திடுக்கிட்டு எழுந்தாள். எதிரே தினேஷ்.

உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்.

இதை கேட்டதும் அவள் தூக்கம் முற்றிலுமாக கலைந்திருந்தது.

கல்யாணத்துக்கு முன்னாடியே உங்கிட்ட சொல்ல முயற்சி பண்ணேன். ஆனா முடியல.

அதே வார்த்தைகள். அவளது இதயத்துடிப்பு அதிகரிக்கத்தொடங்கியது. ஒருவேளை உண்மையை தெரிந்து கொண்டானா? தூக்கத்தில் ஏது உளறி விட்டேனா அல்லது அவனும் யாரையும் காதலிக்கிறானா? அந்த குளிரிலும் அவளுக்கு வியர்த்து.

ஐ லவ் யூ

அவள் புரியாமல் முழித்தாள்.

ஐ லவ் யூ

கொடைக்கானல், மீட்டிங் எல்லாமே இப்போது அவளுக்கு புரிந்தது

என்னை பிடிச்சிருக்கா?

பதில் சொல்ல வார்த்தைகள் இல்லாததால் அவனை எட்டி அணைத்தாள்.

முற்றும்.

Friday, October 29, 2010

கவிதை??


வெண்பாக்கள் போயின
ஹைக்கூக்கள் மலர்ந்தன
மாறாத ஒன்று
அரசனை துதி பாடும் கவிஞர் கூட்டம்!!


Sunday, September 5, 2010

தனசேகரன் F/O 'சி' ப்ளாக் சித்ரா-1

1.அன்றொரு நாள்........


அன்னிக்கு என் நண்பனோட மகள் நிச்சயதார்த்தம் முடிஞ்சு கொஞ்சம் தாமதமாக தான் என்னோட அடுக்கு மாடி குடியிருப்புக்கு வந்தேன்.
வாகன நிறுத்துமிடத்தில் யாரோ சிரித்துக்கொண்டிருப்பது கேட்டது. நான் வீட்டுக்கு போயிருக்கலாம் ஆனா ஏன் சத்தம் கேட்ட பக்கம் போனேன்னு இன்னிக்கு வரை எனக்கு தெரியல.அது தான் நான் முன்னாடி சொன்ன என் முடிவை நோக்கி நான் எடுத்து வைச்ச முதல் அடி.

காற்றில் மது வாடை கலந்திருந்தது. அங்கே இரண்டு இளைஞர்கள் அமர்ந்திருப்பது தெரிந்தது. நான் அவர்கள் பார்வையில் படாமல் மறைந்துகொண்டேன்.அவர்களில் ஒருவனை எனக்கு தெரியும். என் ப்ளாட்டிற்க்கு எதிர் ப்ளாட்டில் தான் இருக்கிறான் இன்னொருத்தன் அவன் நண்பனாக இருக்க வேண்டும்.குசு குசுவென பேசிக்கொண்டிருந்தவனது குரல் திடீரென உச்ச ஸ்துதியை அடைந்தது.

பார்றா இன்னும் ஒரு மாசத்துல அந்த சித்ராவை மடக்கி காட்டுறேன்

எந்த சித்ரா டா?

இதே 'சி' ப்ளாக்குல் இருக்குற சித்ரா தான்

அதற்கு மேல் கேட்க விருப்பமில்லாமல் நான் வீட்டிற்கு சென்றேன். சந்தேகமே வேண்டாம் அவர்கள் பேசிக்கொண்டிருந்த 'சி' ப்ளாக் சித்ராவின் அப்பா தான் நான். அப்புறம் ஏன் நாலு போடாம வந்தேன்னு நினைக்குறீங்களா? அவர்களை திட்டினாலோ அடித்தாலோ விஷயம் வெளிய தெரிஞ்சுடும் . சத்தமே இல்லாம் அவங்களை ஏதும் பண்ணுற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்ல.

அந்த பசங்க பேசினது ஒன்னும் பெரிய தப்பில்லை தான். 40 வருஷத்துக்கு முன்னாடி இன்னொருத்தன் பொண்ணு பின்னாடி நான் சுத்தும் போது இனிச்சது இன்னிக்கு என் பொண்ணு பின்னாடி ஒருத்தன் சுத்தும் போது கசக்குது. ஆனா அவன் சொன்ன வார்த்தை சரியில்ல. மடக்கப் போறனாம். மடக்குறதுக்கு என் பொண்ணு என்ன குடையா? இவன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும்.

வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன். என் மகள் வது கதவை திறந்துவிட்டு அவள் அறைக்குள் சென்று விட்டாள் . இதுல என்ன இருக்கு? அவள் என் கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல , ஏன் என் முகத்தை கூட நிமிந்து பாக்கலை.எனக்கும் என் பொண்ணுக்கும் நடுவுல எவ்வளவு தூரம் இருக்குனு என் மனைவி உயிரோட இருந்த வரை எனக்கு தெரியல. இப்போ தெரிஞ்சாலும் என்ன பண்ணனும்னு தெரியல.21 வருடங்களாய் எங்களிடயே கட்டப்பட்ட சுவர், இடித்தால் உடைவது சுவரா?உறவா? என தெரியாமல் தவிக்கிறேன்.

Tuesday, August 31, 2010

தனசேகரன் F/O 'சி' பிளாக் சித்ரா

1.வாக்குமூலம்

58 வயசுல எல்லோரும் வேலையில் இருந்து ரிடையர்டு ஆவாங்க. நான் வாழ்க்கையில் இருந்து ரிடையர்டு ஆகப்போறேன் அதுவும் ரிடையர்டு ஹர்ட். இது என்னோட மரண வாக்குமூலமா கூட இருக்கலாம். என் பெயர் தனசேகரன். சித்ராவோட அப்பா.

2. அன்றொரு நாள்( வரும் வெள்ளி பதிவு செய்யப்படும்)

Wednesday, December 23, 2009

அழகாய் சிரிக்கிறார்கள் பெண்கள்-2

8.30 மணி ஸ்பெஷல் கிளாசுக்கு கிளம்பாமல் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்த போது காலையில் வாங்க வேண்டிய கடைசி கட்ட திட்டையும் வாங்கி முடித்தான்.
"எருமை மாடு ஏன் என் உயிரை வாங்குற?கூப்பிட்டு விட்டா நான் ஸ்கூலுக்கு வர மாட்டேன்"

சரி.காலைக்கு இது போதும் என நினைத்ததால் ரிமோட்டை எடுத்தான்.சரியாக அவன் ஆப் பட்டனில் கை வைத்தபோது யாரோ ஒரு பெருசு இந்த நாள் இனிய நாள் என சொல்லிக்கொண்டிருந்தது.கை தானாக ஆப் பட்டனை அழுத்த டிவி ஆப் ஆகியது. இப்படி பொறியியல், கம்ப்யூட்டர் என டெக்னாலஜி வளர்ந்துவிட்ட காலத்தில் பிறந்ததற்க்கு கல் காலத்தில் பிறந்திருந்தால் படிக்காமல் ஜாலியாக இருந்திருக்கலாமே என நொந்து கொண்டே பள்ளிக்கு போனான்.வழக்கம் போல பள்ளிக்கூட வாசலில் குழந்தைகள் அழுது கொண்டிருந்தார்கள்.

தலைமை ஆசிரியையின் அறை வாசலில் ரகுவின் அம்மா உட்கார்ந்திருந்தார்கள்.அவனுக்கு எதுவோ சரியாக படவில்லை.கவனிக்காதவாறு வகுப்புக்கு சென்று விடலாமா என யோசித்தான். கூப்பிட்டால் பேசலாம் இல்லையென்றால் எஸ் ஆகிவிடவேண்டுமென நினைத்துக்கொண்டே வேகமாக நடந்தான்.அவனது நல்ல நேரமோ என்னவோ அவனை ரகுவின் அம்மா கவனிக்கவில்லை.

கடைசி பெஞ்சில் நரேந்திரனும் ராஜாவும் இவனுக்காக காத்திருந்தார்கள்

என்ன மாப்ள? என்றான். அவர்கள் அவனை அமைதியாக இருக்கும் படி சைகை காட்டினார்கள். ஏதோ தப்பு நடந்திருக்கிறது என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது.அதற்க்குள் அசெம்பிளி மணி அடித்தது.வழக்கமாக நடக்கும் அசெம்பிளி போல அன்று இல்லை. காற்றில் கூட டென்ஷன் கலந்திருந்தது.அசெம்பிளி முடிந்ததும் 10 ஏ மாணவ மாணவிகளை மட்டும் காத்திருக்கச்சொன்ன போது அவனுக்கு லேசாக வேர்க்கத்தொடங்கியது.மெதுவாக திரும்பி ராஜாவை பார்த்தான் அவனும் இவனை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

டியர் ஸ்டூடன்ட்ஸ்

தலைமை ஆசிரியையின் குரல் தான் அது.அவன் நிமிர்ந்து மேடையை நோக்கினான்.

உங்க வகுப்புல யாரோ ஒருத்தர் தப்பு பண்ணியிருக்கீங்க அவங்களே வந்து சாரி கேட்டுட்டா அந்த விசயத்த அப்படியே விட்டுடலாம்.

அவனுக்கு அப்போது தான் சிரிப்பு வந்தது. என்ன விஷயம்னு சொன்னா தான யாராவது ஒத்துக்குவாங்க.ஒவ்வொரு நாளும் எத்தனையோ தப்பு நடக்குது அதுல இது எதை கேக்குதோ?தனக்கு பக்கத்தில் இருந்த மாணவிகள் வரிசை பக்கம் லேசாக கண்ணை திருப்பினான். ஹேம்ப்ரியா வெயில் தாங்கமுடியாமல் தனது கைக்குட்டையால் வியர்வையை ஒற்றிக்கொண்டிருந்தாள். பொறுத்துப்பார்த்த மேடம் மாணவிகளை மட்டும் தன் அறைக்கு வர சொல்லிவிட்டு வேகமாக போனாள்.ஹேமா இன்னமும் வியர்வையை ஒற்றிக்கொண்டிருந்தாள்.சந்திரன் அவளை திரும்பி பார்த்துவிட்டு வகுப்பறை நோக்கி நடக்கத்தொடங்கினான்.

முதல் பீரியட் முடிய சில நிமிடங்களே இருந்த போது தான் மாணவிகள் திரும்ப வந்தார்கள்.கடைசி பெஞ்ச் வனிதா விடம் என்ன ஆச்சு என பேப்பரில் எழுதி தூக்கிப்போட்டான் நரேந்திரன்.அவளும் ஏதோ பதில் எழுதி தூக்கிப்போட்டாள். நரேந்திரன் முகத்தில் ஆச்சரியம் படர்ந்தது ஒரே நொடி தான் முகத்தை மீண்டும் நார்மலாக்கி விட்டு சந்திரனிடம் நீட்டினான்.அவனும் ஆவலாய் அதை வாங்கிப்பார்த்தான்

"ஹேமா ரகுவுக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்கா"

ராஜாவையும் நரேந்திரனையும் திரும்பி பார்த்தான். ராஜா அமைதி என சைகை காட்டினான்.சந்திரன் அந்த பேப்பரை வாயில் போட்டு சாப்பிடத்தொடங்கினான்.

Sunday, December 20, 2009

இரவுக்கு ஆயிரம் கண்கள்

அது நரகத்துக்கும் சொர்க்கத்துக்கும் இடைபட்ட ஒரு இரவு. செத்தவர்கள் சொர்க்கம் போனார்கள் உயிரோடு இருப்பவர்கள் நரகத்தில் விழுந்தார்கள்.

Monday, November 9, 2009

அழகாய் சிரிக்கிறார்கள் பெண்கள்-1

எதிர் வீட்டு செந்தில் பக்கத்து வீட்டு மாலதியை காதலிக்கிறான்.முக்கு வீட்டு மூர்த்தி மாடி போர்ஷன்ல இருக்குற தேவியை காதலிக்கிறான்.வகுப்பறையில் அவன் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் கிருஷ்ணகுமார் அதே வகுப்பில் படிக்கும் ஜெயந்தியை காதலிக்கிறான்.நண்பர்கள் எதிரிகள் தெரிந்தவன் தெரியாதவன் என எல்லோரும் காதலித்த போதும் காதலும் இல்லாமல் காதலியும் இல்லாமல் அவன் மட்டும் தனித்து நின்றான்.அவன் தான் சந்திரன்.

அவனுக்கும் இவர்களை பார்க்கும் போதெல்லாம் பொறாமையாக தான் இருக்கும்

ட்ரீங்க் ட்ரீங்க்

அந்த அலாரத்தின் ஒலி வீடு முழுக்க எதிரொலித்த போதும் சந்திரன் எழுந்திரிக்கவில்லை.கனவிலாவது காதல் கிட்டாதா என்ற ஏக்கத்தோடு கனவுகளோடு போராடிக்கொண்டிருந்தான்.இரண்டொரு நிமிடங்களில் அவன் போராட்டத்துக்கு விடை கிடைத்தது

"எருமை மாடு எழுந்திரு ட்யூஸனுக்கு நேரமாகுது.ஒழுங்கா படிக்கலைனா மாடு தான் மேய்க்கனும்"

வழக்கமாக கேட்கும் அதே வசனம் தான்.சோம்பல் முறிப்பதற்க்குள் இரண்டாவது இன்ஸ்டால்மென்ட் திட்டு வந்து சேர்ந்தது. இதுக்கு மேல தூங்க முடியாது என உறுதியாக தெரிந்த பின்பு மெதுவாக ஆமை வேகத்தில் எழுந்தான் அவன்.பல் விலக்குவதற்க்குள் மூன்றாம் கட்ட திட்டும் விழுந்துவிட்டது.
"எருமை மாடு பாத்ரூமுலயே தூங்கிட்டியா?"

ஒவ்வொரு நாளும் போராட்டம் என்பது அவன் காலையில் எழுந்து ட்யூஸன் கிளம்புவதில் இருந்து தொடங்கும். ஆறு மணி ட்யூஸனுக்கு அவன் எழுந்திருப்பதே ஆறு மணிக்குதான் அப்போது ஆரம்பிக்கும் போராட்டம் இரவு படுக்க போகும் வரை தொடரும். போனவருடம் வரை அவனது அம்மா பாமா அன்பாக தான் இருந்தாள்.பத்தாம் வகுப்பு ஆரம்பித்த பிறகு ஏன் அம்மா மாறி விட்டாள் என்பது தான் அவனுக்கு புரியவில்லை. அவனிடம் கத்தி கத்தியே தனக்கு பிரஷர் வந்துவிட்டது என அடிக்கடி அம்மா சொல்லுவாள்.ஆனால் அம்மாவால் ஹை டெசிபெலில் பேசாமல் இருக்கமுடியாது என அவன் அறிந்திருந்தான்.பள்ளிக்கூடம் வீடு என மாறி மாறி திட்டு வாங்கியதில் மிச்ச சொச்சம் இருந்த சொரணையும் போய்விட்டது.ஒரு வழியாக ட்யூஸன் கிளம்புவதற்க்குள் 6.15 ஆகிவிட்டது.சரி அங்க போயும் திட்டு வாங்கிக்கலாம் என மெதுவாக தனது சைக்கிளை ஓட்டத்தொடங்கினான்.

அவன் கிளம்பிய பிறகு தான் பாமாவிற்க்கு மூச்சே வந்தது.ஒரு டம்ள்ர் தண்ணியை குடித்துவிட்டு வாசலில் வந்தமர்ந்தாள். இவன் வயசு பிள்ளைங்க எல்லாம் எவ்வளவு சுறுசுறுப்பா இருக்குதுங்க.இவன் மட்டும் ஏன் இப்படி பண்றான்?மக்கு பிள்ளைனா கூட பரவாயில்ல நல்லா படிக்குற பையன் தானே. ஒரு வேளை சேர்க்கை சரி இல்லையோ?

பாமா காபி போடு. சந்திரன் அப்பாவின் குரல் அவளது சிந்தனையை கலைத்தது.இன்று மிச்சம் இருக்கும் வீட்டு வேலையை நினைக்கும் போதே அவளுக்கு மலைப்பாக இருந்தது.

பாமா
இதோ வர்றேங்க

பாமா கிச்சனுக்கு விரைந்தாள்.

சந்திரன் திருப்பதி காலனியை நெருங்கும் போது பின்னால் இருந்து யாரோ பெல் அடிப்பது போல் இருந்தது. இடது பக்கம் பாதி தலையை திருப்பினான் ஹேமப்ரியா வந்து கொண்டிருந்தாள். உலக அதிசயம் தான் ஹேமப்ரியா ட்யூஸனுக்கு லேட்டா?அவனால் தன் கண்ணையே நம்பமுடியவில்லை.

மாப்ளே மாப்ளே

பழகிய குரல் போல் இருக்கவே திரும்பி பார்த்தான்.அவளுக்கும் பின்னால் லொங்கு லொங்கென்று சைக்கிளை மிதித்து வந்து கொண்டிருந்தான் நரேந்திரன்.அவனுக்காக சந்திரன் கொஞ்சம் மெதுவாக ஹேமப்ரியா அவனை முந்திக்கொண்டு சென்றாள். இருவரும் ட்யூஸனுக்குள் போன போது ஆர்க்கானிக் கெமிஸ்ட்றி நடத்திக்கொண்டிருந்தார் நாராயணன்.இவர்களை பார்த்ததும் பாடத்தை நிறுத்தினார்.

என்னடே சந்திரா இன்னிக்கும் ட்யூஸனுக்கு லேட்டா வந்திருக்கே?தனியா வந்தா திட்டுவேன்னு கூடவே உன் நண்பனையும் லேட்டாக்கிட்டியாடே?

இல்லை சார் லேட்டாயிடுச்சு

அது தான் மணி பாக்கத்தெரிஞ்ச குழந்தைக்கு கூடத்தெரியுமே. நான் ஏன் லேட்டுனு கேட்டேன்

சந்திரன் திரும்பி நரேந்திரன் மூஞ்சியை பார்த்தான்.அவன் யாரையோ திட்டுவது போல வேடிக்கை பார்த்துகொண்டிருந்தான்.
சரி டே ரெண்டு பேரும் உள்ளாற வாங்க.

கடைசி வரிசைக்கு முந்தின வரிசையில் முத்துராஜா பக்கத்தில் அவர்களுக்கான இடம் காலியாய் இருந்தது.

டேய் அவளை மட்டும் ஒன்னுமே சொல்லாம உள்ள விட்டான்

வந்தவுடன் பற்றவைத்தான் முத்துராஜா.

அவன் கிடக்கான் விடு டா

வந்தது லேட் இதுல என்னடே பேச்சு?
நோட்ஸ் காட்ட சொன்னேன் சார்.
இன்னிக்கு உங்க அப்பாவுக்கு பேச வேண்டியிருக்கும் போல

அவன் பதிலேதும் பேசவில்லை.

ஹைட்ரஜன் வர்றான் ஆக்சிஜனும் வர்றான். ரெண்டு பேரும் மோதுற இடத்தில் டமால்.வாட்டர் அதாவது தண்ணீர் உருவாகுறான்.
நாராயணன் நடத்துற ஸ்டைல் இது தான். அவர் இப்படி சொன்னவுடனே ஏதோ பெரிய காமெடியை கேட்ட மாதிரி இந்த படிப்பாளி கூட்டமெல்லாம் சேர்ந்து சிரிப்பாங்க. இதுல என்ன காமெடி இருக்கு? வாத்தியார்களும் இந்த படிப்பாளிகளும் இருக்கும் வரை தன் வாழ்க்கையில் வசந்தம் வீசப்போவதில்லை என்பதை நினைத்து நொந்துகொண்டான்.

Tuesday, October 27, 2009

அன்று மழை பெய்தது - 12

ஹரிதா:என்ன சொல்ற?
மணிசங்கர்:உன்னோட பிறந்த நாளுக்கு ஒரு மொபைல் வாங்கி குடுத்தேன்ல அதுல ஒரு ரிக்கார்டர் இன்ஸ்டால் பண்ணி அதை ஹைட் பண்ணி வைச்சிருந்தேன்.உன் மேல சந்தேகப்பட்டு இல்ல.ஒரு வேளை தாமோதரன் உனக்கு போன் பண்ணி தொல்லை குடுத்தா அத நான் தெரிஞ்சுக்கனும்ல அதனால தான் அப்படி பண்ணேன்.நீ யார் கூட பேசினாலும் அது ரெக்கார்ட் ஆகி தனியா ஸேவ்(save) ஆயிடும்.
அன்னிக்கு ஹாஸ்பிட்டல்ல உன் மொபைல பாக்கனும்னு வாங்கினேன்ல அப்போவே நீ பேசுனத என் மொபைலுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிட்டேன்.தாமோதரன் கூட என்ன பேசுனனு நியாபகம் இருக்கா?

மறுமுனையில் மரண அமைதி நிலவியது.

மணிசங்கர்:அந்த ரெக்கார்டிங்க கேட்ட உடனே தாமோதரனை கூப்பிட்டு பேசினேன்.அந்த மழை பெய்த இரவு முடிஞ்சு கொஞ்ச நாள் கழிச்சு ஆர்க்குட்ல அவன் உனக்கு திரும்பவும் ஃப்ரெண்ட் ரிக்வஸ்ட் (Friend request) குடுத்திருக்கான்.நீயும் அத ஏத்துக்கிட்ட.மணிக்கணக்கா ரெண்டு பேரும் சாட் பண்ணியிருக்கீங்க.முதல் முதலா சத்யம் தியேட்டர்ல மீட் பண்ணியிருக்கீங்க.இது நடந்து ஒரு மாசத்துல ரெண்டு பேரும் மகாபலிபுரம் போயிருக்கீங்க.அங்க என்ன நடந்ததுனும் எனக்கு தெரியும்.எந்த தப்புக்கும் ஒரு காரணம் இருக்கனும் ஹரிதா.நீ பண்ண தப்புக்கு என்ன காரணம்னு மட்டும் சொல்லு.ப்ளீஸ்

அவள் நடுங்கும் குரலோடு பேசத்தொடங்கினாள்

ஹரிதா:எங்க அப்பா அம்மா ரெண்டு பேருமே நான் குழந்தையா இருக்கப்ப இருந்தே வேலைக்கு போயிருவாங்க.அப்போ இருந்து நானே தான் வளர்ந்தேன்.ஏதோ ஒரு சந்தோஷம்னாலோ கஷ்டம்னாலோ அத ஷேர் பண்ணிக்க எனக்கு யாருமே இல்ல.அப்போ தான் என் வாழ்க்கைல இன்டெர் நெட் வந்தது.சாட்டிங்க் எனக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷமா நான் நினைச்சேன்.கொஞ்ச நாள் கழிச்சு தான் தெரிஞ்சது என் கூட சாட் பண்ற எல்லோருமே வேற ஒன்ன எதிர்பாக்குறாங்க.ஒருத்தன் ரெண்டு பேரு இல்ல.பதினாலு வயசு பையன்ல இருந்து பல்லு போன கிழம் வரை எல்லோருக்கும் ஒரே விஷயம் தான்.சரின்னு நானும் முதல்ல சாட்டிங்க் தானேனு அவங்க இஷ்டப்பட்ட படி பண்ணேன்.அப்புறம் ஒரு ஸ்டேஜ்ல நான் அதுக்கு அடிமை ஆயிட்டேன்.அப்புறம் அதுக்கு அடுத்த ஸ்டேஜ் டேட்டிங்க்.தாமோதரனும் அப்படி தான்.உன்னை பாக்குற வரை நான் அப்படி தான் இருந்தேன். நான் இத்தனை வருஷமா ஏங்கிகிட்டு இருந்த அன்பை நீ எனக்கு கொடுத்த.
மணிசங்கர்:தாமோதரன் அப்படி இல்ல ஹரிதா.அவன் உன்னை லவ் பண்றான்
ஹரிதா:நீ என்னை லவ் பண்ணலையா?
மணிசங்கர்:பண்ணினேன்
ஹரிதா:யோசிச்சு தான் சொல்றியா?
மணிசங்கர்:முடிவு பண்ணிட்டு தான் பேசறேன்.
ஹரிதா: நீ என்ன பெரிய யோக்கியனா?இதை எல்லாம் ஆரம்பிச்சு வைச்சவனே நீ தானே.
மணிசங்கர்:அதனால இதை நானே முடிச்சும் வைச்சிடறேன். நீ தாமோதரன் கூட சேர்ந்து வாழுற வழிய பாரு
ஹரிதா:நான் யாரை லவ் பண்ணனும்னு நீ எனக்கு சொல்ல வேணாம்.
மணிசங்கர்:நீ இன்னும் திருந்தல ஹரிதா.
ஹரிதா:என்ன சொல்ற?
மணிசங்கர்:இப்போ கூட எங்கிட்ட போன் பேசிட்டே சாட் பண்ணிட்டு தானே இருக்க?
ஹரிதா:இல்ல.
மணிசங்கர்:பொய் சொல்லாத ஹரிதா.உன் கூட சாட் பண்ணிட்டு இருக்குறது நான் தான்.என்னோட ஃபேக் ஐடி(fake id). நேத்து கூட கேம்(cam)ல மூஞ்சிய காட்டுனியே.நான் கூட இன்னிக்கு போட்டோ அனுப்புறேன்னு சொன்னேனே.மறந்துட்டியா ?

சாட்டிங்க் விண்டோவை மூடினான் மணிசங்கர்.ஹரிதாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது.கையும் களவுமாக மாட்டிக்கொண்ட பதட்டம் வேறு சேர்ந்து கொண்டது.

ஹரிதா:இனி உங்கிட்ட பேசி ஒரு பிரோயஜனமும் இல்ல. நீ ஒரு சைக்கோ
மணிசங்கர்: சரி நான் சைக்கோவாகவே இருந்திட்டு போறேன்.கதை இன்னும் முடியல.அதை மட்டும் கேளு.

ஹரிதாவின் முகத்தில் கேள்விக்குறிகள் படர்ந்தன.

மணிசங்கர்:நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சுத்தினப்ப எங்க போனலும் உன் டிஜிட்டல் கேமராவை எடுத்துட்டு தான் போவியாமே.பெட் ரூம் உள்பட. நெறைய ஜலபுல ஜங்க்ஸ் போட்டோலாம் எடுத்தீங்கலாமே.அவன் சொன்னான்.எப்படியும் போட்டோனு ஒன்னு எடுத்தா அத உன் லேப்டாப்புல ட்ரான்ஸ்பர் பண்ணியிருப்பனு தெரியும்.அதுனால தான் ஹாஸ்பிட்டல்ல இருந்தப்ப உங்கிட்ட லேப்டாப் வாங்கினேன்.
ஹரிதா சிரித்தாள்

ஹரிதா:அதையெல்லாம் லேப்டாப்புல வைச்சுகிட்டே உங்கிட்ட குடுக்க நான் என்ன லூசா?
மணிசங்கர்:இல்ல ஹரிதா.ரெக்கவரி(recovery) தெரியுமா? நீ எப்போவோ டெலிட் பண்ண பைலை கூட தேடி எடுத்திரலாம்.தேதி மட்டும் தெரிஞ்சா போதும்.நானும் அத தான் பண்ணேன்.
ஹரிதா:ஏன் இப்படி எல்லாம் பண்ற?உனக்கு என்ன வேணும்?
மணிசங்கர்:அவன் அவன் பண்ணினதுக்கு அவன் அவனுக்கு தண்டனை. நான் ஒரு தப்பு பண்ணினேன்.அது எங்கயோ சுத்தி எனக்கு தீராத வலிய இப்போ தந்திருச்சு. நீ ஒரு தப்பு பண்ணியிருக்க. அதுக்கு உனக்கு நான் தண்டனை கூட தரல.ஒரு வாய்ப்பா தர்றேன். ஒரு குடும்பம், பாசம் இதுக்கெல்லாம் ஏங்குனதா சொல்றியே அதை எல்லாம் உனக்கு தர ஒருத்தன் ரெடியா இருக்கானே.அதை மட்டும் நெனைச்சு பாரு
ஹரிதா:நான் முடியாதுனு சொல்லிட்டா?
மணிசங்கர்:அந்த போட்டோவெல்லாம் தாமோதரனுக்கு மெயில் அனுப்பிட்டேன்.இனி நீயாச்சும் அவனாச்சும். நான் அடுத்த வாரம் இந்த ஊரை விட்டு போயிடுவேன்.

நான் ஹரிதா, பாட்டு சூப்பர்,டபுள்ஸ் ஓட்டத்தெரியுமா?இனிமே குடிக்காத ப்ளீஸ்.கல்யாணம் பண்ணிக்கலாமா? நீ என்ன பெரிய யோக்கியனா?அதையெல்லாம் லேப்டாப்புல வைச்சுகிட்டே உங்கிட்ட குடுக்க நான் என்ன லூசா?
இதுவரை அவள் பேசியது எல்லாம் மனதிற்க்குள் ஓடியது

மணிசங்கர்:இனிமே நான் சாகுற வரை உன்னை பாக்கக்கூடாது.உன் குரலை கேட்கக்கூடாது.குட் பை ஹரிதா.ஆல் தி பெஸ்ட்.

அழுது கொண்டே போனை கட் பண்ணினான் மணிசங்கர்.அதிர்ந்து போய் போனை பார்த்தாள் ஹரிதா.தாமோதரன் காலிங்க் என வந்தது.
அவள் பயந்து கொண்டே போனை எடுத்தாள்.தாமோதரன் சிரித்துக்கொண்டே போனை காதில் வைத்தான்.

முற்றும்.
©:S.Karthikeyan
என்னுரை:
இந்த கதை உருவாக பெரிதும் காரணமாக இருந்த திரு ப.நாகராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி.

Wednesday, September 23, 2009

அன்று மழை பெய்தது-11

ஹரிதா:என்ன த்ரில்லரா?
மணிசங்கர்:கதைய கேட்டுட்டு நீயே சொல்லு
ஹரிதா:சரி சொல்லு.
மணிசங்கர்:ஹீரோ சென்னைல வேலை இல்லாம சுத்திட்டு இருக்கான்
ஹரிதா:ஹீரோ பேரு என்ன மணிசங்கரா?
மணிசங்கர்:அது உன் இஷ்டம்
ஹரிதா:சரி சொல்லு
மணிசங்கர்:ஒரு நாள் நைட் சரக்கு எல்லாம் வாங்கிட்டு ரூமுக்கு வர்றான்.சரக்கு வாங்கினது போக மிச்சம் அவன் கிட்ட ஒரு ரூபாய் தான் இருந்தது.அப்பா கிட்ட பணம் போட்டு விட சொல்லலாம்னு பாத்தா லேட் ஆயிருச்சு.காலையில சொல்லிக்கலாம்னு தண்ணி அடிச்சுட்டு தூங்கிட்டான்.
ஹரிதா:சொந்த கதை போல
மணிசங்கர்:ஆமா அப்படியும் சொல்லலாம்
ஹரிதா:சரி மேல சொல்லு
மணிசங்கர்:காலையில எழுந்திருச்சு பாத்தா மொபைல்ல பேலன்ஸ் இல்ல.ஹலோட்யூனுக்கு எடுத்துட்டானுங்க
அவள் சிரிப்பது அவனுக்கு கேட்டது.கதை முடியும் போது அவள் என்ன மன நிலையில் இருப்பாளோ என யோசித்தான்.
ஹரிதா:ஹேய் கதை இன்டிரஸ்டிங்கா போது டா..ம் ம் சொல்லு.
மணிசங்கர்:அவன் ஒரு பொன்னோட ஆர்க்குட் அக்கௌன்ட ஹேக் பண்ணி அத வச்சு ஒரு பையன ஏமாத்தி அவன் நம்பர்க்கு ரீ சார்ஜ் செய்ய வைச்சுடரான்.அப்புறம் அடுத்த மாசம் வேற போஸ்ட் பெய்ட் சிம் மாத்திடுறான்.புது சிம் வந்த நேரம் அவனுக்கு வேலை கிடைச்சிடுது.யார் அக்கௌன்ட அவன் யூஸ் பண்ணானோ அந்த பொண்ணும் அவன் கூட வேலை பாக்குறா.ஒரு கட்டத்தில அவளை லவ் பண்ண ஆரம்பிச்சுடுறான்.அவளும் அவனை லவ் பண்றா.அப்போ அவங்க ஆபிஸ்க்கு ஒரு புது மானேஜர் வர்றார்.அவர் தான் அந்த ரீ சார்ஜ் செஞ்சு விட்டவர்.மானேஜரும் அந்த பொண்ண மறக்கல.கதை புரியுதா ஹரிதா?
எதிர் முனையில் லேசாக அழுகை சத்தம் கேட்டது.
மணிசங்கர்:ஹரிதா?
ஹரிதா:பேசாத.நீ என்ன ஏமாத்திட்ட.
அவள் பேச்சில் சுத்தமாக அன்பு மறைந்து போயிருந்தது.
மணிசங்கர்:ஆமா உங்கிட்ட எப்படி மன்னிப்பு கேக்குறதுனு எனக்கு தெரியல அதுனால தான் கதை மாதிரி சொன்னேன்.
ஹரிதா:நீ இப்படி ஒரு கேவலமான விஷயத்த பண்ணுவனு நான் நெனைச்சு கூட பாக்கல.அது எப்படி அடுத்தவங்க அக்கௌன்ட ஹேக் பண்ணி..உன்னை நான் எவ்ளோ நம்பினேன்?இப்போ மட்டும் சொல்ற?என்ன திருந்திட்டியா?
மணிசங்கர்:இல்ல ஒரு பாடம் கத்துக்கிட்டேன்.
ஹரிதா:என்ன?
மணிசங்கர்: போனை கட் பண்ணிடாம மிச்ச கதையையும் கேட்டா உனக்கே புரியும்.தாமோதரன பாத்த உடனே அவனால உனக்கு ஏதாவது பிரச்சனை வரும்னு நான் பயந்தேன்.அவனும் அதுக்கு ஏத்தாப்புல தான் நடந்துகிட்டான்.அன்னிக்கு நாம மொபைல் வாங்க போனப்ப அங்க அவனை பாத்தேன்.அடுத்த கொஞ்ச நாள்ல அவன் எனக்கு ட்ரான்ஸ்பர் குடுத்தான்.அவன் உனக்கு தொல்லை குடுக்கிறான்னு எனக்கு புரிஞ்சிருச்சு ஆனா நீ எங்கிட்ட சொன்னா பிரச்சனை பெருசாகும்னு சொல்லவே இல்ல.நீ சொல்லாட்டி என்ன? நாம பரிஸ்டா போயிட்டு வந்த அன்னிக்கு அவன் என் வீட்டுக்கே வந்து என்னை மிரட்டிட்டு போயிட்டான்.அந்த கடுப்புல தான் அன்னிக்கு தண்ணி அடிச்சேன்.அதுக்கு அப்புறம் நீ தேவதை மாதிரி என் உயிர காப்பாத்தின.

அவனது குரல் உடைந்தது.அவனால் அதற்க்கு மேல் பேச முடியவில்லை.அவளே பேசினாள்

ஹரிதா:சரி கவலை படாத.இப்போ என்ன என்கிட்ட சொல்லிட்டேல. நீ சொன்ன மாதிரியே நான் வேலைய விட்டுடுறேன்.போதுமா?

அவள் குரலும் உடைந்து தான் போயிருந்தது

மணிசங்கர்:கதை இன்னும் முடியல ஹரிதா.

அவன் ஒரு இடைவெளி விட்டான்.இருவருமே பேசவில்லை.அமைதியின் மறுபக்கத்தை இருவரும் உணர்ந்தார்கள்.

மணிசங்கர்:நான் உன்னை பொய் சொல்லி லவ் பண்ணேன்.நீ என்ன பொய்யாவே லவ் பண்ண.ஏன் ஹரிதா?

அவள் விசும்பலை நிறுத்தினாள்.அவன் அழுகையை அடக்க முயன்று தோற்று போய் அழுது கொண்டே பேசத்தொடங்கினான்.

Tuesday, August 4, 2009

அன்று மழை பெய்தது -10

ஹலோ சார்.என்ன இந்த பக்கம்?
உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் மணிசங்கர்
சொல்லுங்க சார்
ஹரிதா என் ஆளு இனி என் விஷயத்துல தலையிடாதிங்க

மணிசங்கருக்கு சுர்ரென்று இருந்தது.

ஒழுங்கா ஓடிப்போயிடு மானெஜர் மயிறுனெல்லாம் பாக்கமாட்டேன் கொன்னேபோடுவேன்.
தப்பு பண்ற மணிசங்கர்.இதுக்கு வருத்தப்படுவ.
பொத்திட்டு போடா

மணிசங்கரை முறைத்துக்கொண்டே காரை எடுத்தான் தாமோதரன்.மணிசங்கருக்கு கோபத்தில் கை நடுங்கியது. நடுக்கத்துடன் சிகரெட்டை பற்ற வைத்தான்.அவனால் நம்பவே முடியவில்லை.அவன் வீட்டு வாசலில் வைத்தே அவன் காதலியை மறக்கும் படி அவனை மிரட்டி விட்டு செல்கிறான்.இதற்கு மேல் ஹரிதாவிடம் மறைத்து புண்ணியமில்லை.அவளுக்கு போன் செய்தான்.போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருப்பதாக தகவல் வந்தது.எரிச்சல் மேலும் அதிகமாகியது.டாஸ்மாக்கை நோக்கி வண்டியை விட்டான்.எல்லாம் வாங்கி விட்டு வீடு திரும்பிய போது மணி பத்தரை தொட்டிருந்தது.தனியே தண்ணியடிப்பதை இன்று வரை வரை சொர்க்கமென நினைத்தான் ஆனால் இன்று அதுவே அவனுக்கு நரகமாய் தெரிந்தது.அந்த மழை பெய்த இரவை மீண்டும் நினைத்துப்பார்த்தான்.இப்படியெல்லாம் கூட நடக்குமா?இத தான் விதினு சொல்லுவாங்களோ?பதில் வரும் முன் வாந்தி வந்தது.இன்று வழக்கத்தை விட போதை மிகவும் அதிகமாயிருந்தது. தட்டு தடுமாறி சென்று வாந்தி எடுத்தான்.வாந்தி சிவப்பாக இருந்தது.வயிறு எரியத்தொடங்கியது.தரையில் உட்கார்ந்தான்.போதை தெளிவது போல இருந்தது.மொபைல் சினுங்கியது.ஹரிதா தான்.பேச முயற்சித்தான்.ஆனால் நாக்கு குழறியது.

ஆம்புலன்ஸ் ஹரிதா வீடு ரத்தம்

போன் கட் ஆனது.தாமோதரன் பில்லி சூனியம் வைச்சிட்டான்.நினைவுகளும் பாதியில் கட் ஆக கண்களை மூடினான் மணிசங்கர்.
கண்களை திறந்த போது சுற்றிலும் வெள்ளையாக இருந்தது.சொர்க்கமாக இருக்கும் என்ற நினைப்பு தோன்றியது ஆனால் அவனுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்ற நினைப்பு எழவே சுற்றிப்பார்க்க முயற்சித்தான்.வெள்ளை நிற சுடிதாரில் தேவதை போல நின்றுகொண்டிருந்தாள் ஹரிதா.இரவு முழுவதும் கண் உறங்கவில்லை என்பது அவளை பார்த்தாலே புரிந்தது.கேவலமாக திட்ட போகிறாள் என எதிர் பார்த்தான்.ஆனால் அவள் திட்டவில்லை.மெதுவாக அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

இனி குடிக்காத.ப்ளீஸ்.

அவனுக்கு செருப்பால் அடித்தது போல இருந்தது.அவளது கைகளை பற்றினான்.

மாட்டேன்.

மெலிதாய் சிரித்தாள் அவள்.

உங்க வீட்டுக்கு சொல்லிட்டேன்.
என்ன சொன்ன?
நீ டூப்ளிக்கெட் சாராயம் குடிச்சிட்டு ரத்த வாந்தி எடுத்தன்னு சொன்னேன்.

அவன் முழித்தான்.

முழிக்காத.புட் பாய்ஸனிங்க்னு சொல்லிருக்கேன்.உங்க அம்மா காலையிலேயே வந்திட்டாங்க. கேன்டீன் வரை போயிருக்காங்க.
நீ யாருனு கேட்டாங்களா?
ஃப்ரென்ட்னு சொல்லிருக்கேன்.
உண்மையவே சொல்லிருக்கலாம்.
சொல்றேன் சொல்றேன்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவனது அம்மா அறைக்குள் நுழைந்தாள்.

சரி.நான் போயிட்டு வர்றேன்.ஆபிஸ்க்கு லேட் ஆயிடுச்சு.

அவனது அம்மாவிடமும் சொல்லிவிட்டு ஹரிதா கிளம்பினாள்.அவள் சென்றதும் தான் முந்தின இரவை பற்றிய நினைவுக்கு வந்தது.
அம்மா வந்து அவன் தலையை வருடிக்கொடுத்தாள்.உறக்கம் கண்ணைத்தொட்டது.அன்று பெரும்பாலும் உறக்கத்தில் கரைந்தது.
சாயங்காலம் ஹரிதா வந்தாள்.அம்மாவுக்கு அனேகமாக விஷயம் புரிந்திருக்க வேண்டும்.ஹரிதாவிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு அவளே வெளியே சென்று விட்டாள்.

எப்படி இருக்க?
பரவாயில்ல.இன்னிக்கு வேலை எப்படி இருந்தது?
நீ சொன்னது இப்போ தான் கொஞ்சம் புரியுது
என்ன சொன்னேன்?
தாமோதரன்.
ஏன் எதுவும் தொல்லை குடுத்தானா?
இல்லை.ஒருத்தன் பார்வைய வைச்சே அவன் மனசுல என்ன ஓடுதுனு பொண்ணுங்களால கண்டுபிடிச்சுற முடியும்.

அவன் முந்தின இரவு நடந்தவற்றை அவளுக்கு விவரித்தான்.

நீ வேலைய விட்டுடு ஹரிதா.நானும் ட்ரான்ஸ்பர ஏத்துக்கிறேன்.அடுத்த வாரத்துல எங்க அப்பா அம்மா உங்க வீட்டுக்கு கல்யாணம் பேச வருவாங்க.உங்க வீட்ல எதுவும் பிரச்சனை இல்லையே?
எனக்கு ஓகேனா ஒரு பிரச்சனையும் இல்ல
ஏன் நீங்க என்ன சொல்ல போறிங்க?

அவள் கையை பற்றினான்.மொபைல் நழுவி கீழே விழுந்தது.

அய்யோ
ஒன்னும் இல்ல.மொபைல் எப்படி இருக்கு?
சூப்பர்
குடு பாப்போம்
நீ தான வாங்கி குடுத்த.நீயே பாக்கலியா?
குடு பாப்போம்
இந்தா.நீ பாத்திட்டு இரு.நான் போயி அத்தைய பாத்திட்டு வர்றேன்.
இப்போவே மாமியாரும் மருமகளும் கூட்டு சேர்ந்திட்டீங்களா?
போடா

அவள் மீண்டும் திரும்பிய போது அவன் உறங்கிக்கொண்டிருந்தான். மொபைலை எடுத்துக்கொண்டு அவன் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அவள் சென்றாள்.அவனால் ஆஸ்பத்திரியில் இருக்க முடியவில்லை.எப்போது தான் வெளியே விடுவார்கள் என ஆகிவிட்டது. ஹரிதாவுக்கும் தனக்கும் கல்யாணம் என்று சொல்லும் போது தாமோதரன் எப்படி முழிப்பான் என யோசித்துப்பார்த்தான். சிரிப்பு வந்தது. மருத்துவமனையில் அவன் போரடிப்பதாக சொல்லவே மறுநாள் ஹரிதா தனது லேப்டாப்பை கொண்டுவந்து கொடுத்தாள்.இரண்டு நாட்களில் அவனை டிஸ்சார்ஜ் செய்தார்கள்.அம்மாவும் ஊருக்கு கிளம்பினாள்.அவளை ரெயில் ஏற்றிவிட்டு வீடு திரும்பும் போது ஒம்பது மணி ஆகியிருந்தது.தாமோதரனுக்கு கூப்பிட்டான்.

ஹலோ சார்
நல்லா இருக்கீங்களா மணிசங்கர்?
ரொம்ப நல்லா இருக்கேன் சார்.நான் ட்ரான்ஸ்பர் எடுத்துக்குறேன் சார்.எப்போ அங்க ஜாய்ன் பண்ணனும்?
அடுத்த வாரம்
தேங்க் யூ சார்
நான் சொன்ன இன்னொரு விஷயத்த பத்தி யோசிச்சு பாத்தீங்களா?
முடிவே பண்ணிட்டேன் . நாளைக்கு காலையில நீங்களே தெரிஞ்சுகுவீங்க.
சரி மணிசங்கர்.பை

போன் கட் ஆனது.மணிசங்கர் ஹரிதாவின் மொபைலுக்கு அழைத்தான்.

எப்படி இருக்க டா?
நல்லா இருக்கேன்.
மாத்திரையெல்லாம் சாப்பிட்டாச்சா?
ஆச்சு.
அத்தை ஊருக்கு கிளம்பிட்டாங்களா?
கிளம்பியாச்சு.
அப்புறம் சொல்லு
உனக்கு ஒரு கதை சொல்றேன் ஹரிதா.
இத்தனை நாளா கவிதை சொல்லி கொடுமைபடுத்தின.இப்போ கதையா? ஏண்டா?
இது உனக்கு புடிக்கும்
அப்படியா?சரி.கதை பேரு என்ன?
அன்று மழை பெய்தது

Friday, July 24, 2009

அன்று மழை பெய்தது - 9

வாங்க ஹரிதா.

மணிசங்கர் நீங்க உங்க கேபினுக்கு போகலாம்.

மணிசங்கர் அவனை முறைத்துக்கோண்டே வெளியேறினான்.ஹரிதா அப்பாவியாக அந்த அறைக்குள் நுழைந்தாள்.அவன் கேபினுக்கு செல்லவில்லை.கையில் நடுக்கம் தெரிந்தது.சிகரெட்டை எடுத்துக்கொண்டு கம்பெனியை விட்டு வெளியேறினான்.திரும்ப வந்த போது ஹரிதா அவனுக்காக காத்திருந்தாள்

என்ன ஆச்சு?
ஒன்னும் இல்ல.
தம் அடிச்சியா?

அவன் பதில் சொல்லவில்லை.காதலிகளிடமே உண்டான கெட்ட பழக்கம் இது.காதலிச்சா தம் அடிக்க கூடாது.தண்ணி அடிக்க கூடது.சைட் அடிக்க கூடாது.சுருக்கமா சொன்னா ஒரு ஆணியும் புடுங்க கூடாது.

என்ன பதில காணோம்?
டென்ஷன்.உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்.
சொல்லு.

சாயங்காலம் பெசன்ட் நகர் பீச்சுக்கு போகலாம்

அவள் கல கலவென சிரித்தாள்.

இதுக்கு தான் இவ்ளோ டென்ஷனா?
இல்ல சாயங்காலம் சொல்றேன்.

அவளுக்காக பெசன்ட் நகர் கடற்கரை எதிரில் இருக்கும் பரிஸ்டாவில் காத்துக்கொண்டிருந்தான் மணிசங்கர்.இன்னும் கொஞ்ச நேரத்துல ஹரிதா வந்திருவா.அவ கிட்ட என்ன சொல்றது?எவ்ளோ சொல்றது என யோசித்துக்கொண்டிருந்தான்.அவன் முகத்தின் முன் கையை ஆட்டி அவன் சிந்தனையை கலைத்தாள் ஹரிதா.

என்ன ரொம்ப டல்லா இருக்க?
அதெல்லாம் இல்ல.
சும்மா சொல்லாத.காலையில் நான் உள்ள வந்தப்ப நீயும் மானேஜரும் ஏதோ சண்டை போட்டு கிட்டு இருந்த மாதிரி இருந்தது.
சண்டையெல்லாம் போடல. எனக்கு டிரான்ஸ்பர்.அடுத்த வாரத்துல இருந்து ஹெட் ஆபிஸ்.
என்ன திடீர்னு?
அவன் சரியில்லை ஹரிதா.
புரியல.யார சொல்ற?
தாமோதரன்.
இத்தனை நாளா ரவிகுமார திட்டிட்டு இருந்த.இப்போ இவரா?
அய்யோ உனக்கு புரியல.
உனக்கு தான் புரியல.ஹெட் ஆபிஸ் உனக்கு ப்ரோமோஷன் தானே?
வேலைல ப்ரோமோஷன கொடுத்துட்டு வாழ்க்கையில லே ஆஃப் கொடுக்க பாக்குறான்.
டையலாக் கேவலமா இருக்கு.

அவள் சிரித்தாள்.அவனுக்கும் அவளை கலவரப்படுத்த மனமில்லை.இன்னிக்கு
வேணாம் இன்னொரு நாள் சொல்லிக்கலாம்.

சரி அத விடு.
ஏதோ முக்கியமான விஷயம் சொல்லனும்னு சொன்ன?இது தானா?
இல்லை.
சரி அத சொல்லு.
ஐ லவ் யூ.

அவள் வாய் விட்டு சிரித்தாள்.இது தான் அவ கிட்ட அவனுக்கு ரொம்ப பிடிச்சது.
எந்த உணர்ச்சியையும் மறைக்காம அப்படியே வெளிய காட்டிடுவா. அவளுக்காக வாங்கி வைத்திருந்த மொபைலை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.

என்ன இது?
ஒரு சின்ன கிஃப்ட்.
எதுக்கு?
சும்மா தான்.
சரி ஆனா ஒரு கண்டிஷன்.பர்த் டே க்கு வேற கிஃப்ட் தரனும்
கண்டிப்பா தர்றேன் போதுமா?
ஒகே.

அவள் மொபைலை எடுத்துக்கொண்டாள்.அவள் தெருமுனை வரை பேசிக்கொண்டே வந்தாள்.அவன் இப்போதே தலையாட்டி பழகத்தொடங்கினான்.

நிறுத்து.இங்கயே இறங்கிக்கிறேன்.
ஏன் வீட்டுலயே இறக்கி விடுறேனே?
எதுக்கு நான் வேலை பாக்குறது உனக்கு புடிக்கலயா?
கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கெல்லாம் போகக்கூடாது.
இவ்ளோ கண்டிஷன் போட்டா உன்னை கல்யாணம் பண்ணிக்கிறத பத்தி யோசிக்க வேண்டியிருக்கும்.
அடி.

செல்லமாக கோபித்துக்கொண்டு திரும்பினாள்.அவனும் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

ஒய்
என்ன?
உனக்கு ஒரு கிஃப்ட் வாங்கி வச்சிருக்கேன்.
என்ன?

அவள் ஹேன்ட் பேக்கை துழாவத்தொடங்கினாள்.

கண்ண மூடு குடுக்குறேன்.

தலையாட்டிக்கொண்டே கண்ணை மூடினான்.அவள் அவசரம் அவசரமாக அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு விலகி நின்றாள்.அவன் திகைப்புடன் கண்ணை திறந்தான்.அவனை பார்த்து கண்ணடித்து விட்டு திரும்பி நடந்தாள்.

ஹரிதா
என்ன டா?
தாமோதரன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு.நான் சொல்றது புரியுதுல்ல?
அய்யோ புரியுது.

அலட்சியமாக சொல்லி விட்டு அவள் ஏதோ பாடலை முனுமுனுத்த படி நடக்கத்தொடங்கினாள்.

முதல் காதல்.முதல் முத்தம்.முதல் சிகரெட். இது மூன்றையும் ஒரு மனிதனால் எப்போதும் மறக்க முடியாது.அவை ஆசிர்வதிக்கப்பட்ட தருணங்கள்.அவள் வீடு போகும் வரை நின்று பார்த்துக்கொண்டிருந்தான்.
கிளம்புவதற்கு முன் தெருவை சுற்றி நோட்டம் விட்டான்.

யாருக்கு தெரியும் அந்த தாமோதரன் ****** இங்க தான் எங்கயாச்சும் சுத்திட்டு இருப்பான்.

அதே யோசனையுடன் வீடு திரும்பினான் மணிசங்கர்.அவன் வீட்டு வாசலில் தாமோதரன் நின்று கொண்டிருந்தான்.

Wednesday, July 22, 2009

அன்று மழை பெய்தது-8

ஹரிதாவை பத்தி நினைக்குற நேரத்த விட தாமோதரனை பத்தி நினைக்குற நேரம் தான் அவனுக்கு அதிகமா தெரிஞ்சது. காதல் பேசி அழைத்தது. பேச்சுவாக்கில் ஹரிதாவிடம் கேட்டான்.

புது மானேஜர் எப்படி?
பரவாயில்ல

இன்னும் பையன் வேலைய ஆரம்பிக்கல போல என நினைத்துக்கொண்டான்.

சரி ஷாப்பிங் போனும்னு சொன்ன?எத்தன மணிக்கு?
நீ தான் வரலைனு சொல்லிட்டல்ல.அப்புறம் என்ன?
சும்மா தான்.என்ன திடீர் ஷாப்பிங்?
அடுத்த வாரம் எனக்கு பிறந்த நாள் வருது.அதான் ட்ரெஸ் எடுக்க போறேன்.
சரி.எங்க போற?
ஸ்பென்சர்.லேட் ஆகுது.நான் போயிட்டு வந்து கூப்பிடுறேன்.பை.
பை

ஒரு வழியாக அவள் ஷாப்பிங் முடித்த போது மணி 9.30 ஆகிவிட்டிருந்த்து.
உடலில் சோர்வு ஏற்பட்டிருப்பதை உணர்ந்தாள்.சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு போகலாமா இல்லை வீட்டுக்கு போய் சாப்பிடலாமா என யோசித்து கொண்டிருந்தபோது தான் அவனை கண்டாள்.கையில் யுனிவெர்செல் கவர்.
அவனை பார்த்ததும் அவளுக்கு கோபம் தான் வந்தது.அவன் எண்ணை மொபைலில் அழுத்தினாள்.

ஹலோ
எங்க டா இருக்க?
என்ன மரியாதை குறையுது?நான் வெளிய இருக்கேன்.
நானும் அதே வெளிய தான் இருக்கேன்.ரைட்ல திரும்பி பாரு.

அசடு வழிந்த படி திரும்பினான் மணிசங்கர்.

இங்க என்ன பண்ற?ஸ்பென்சர் தானே போறேன்னு சொன்ன?
என் கூட ஷாப்பிங் வர மாட்டேன்னு சொல்லிட்டு சிட்டி சென்டர்ல உனக்கு என்ன வேலை?
போலியாய் முகத்தில் கோபம் காட்டினாள் அவள்.அவள் எத்தனை அழகு என அப்போது தான் அவன் முழுதாய் உணர்ந்தான்.
சும்மா தான் வந்தேன்.
மொபைல் புதுசா?குடு பாப்போம்
இது ரொம்ப வேண்டியவங்களுக்கான பிறந்த நாள் பரிசு.வேற யார் கிட்டவும் காட்ட முடியாது.
அது சரி.
அவள் சட்டென சிரித்தாள் அவன் அதில் தொலைந்தான்.

ஹேய் அங்க பாரு நம்ம புது மானேஜர்

சட்டென அவன் முகம் கறுத்தது

எங்க?
அதோ பழமுதிர்ச்சோலைல பாரு
சரி வா நாம கிளம்புவோம்.மணி 10 ஆச்சு
சரி.

ஹரிதாவுடன் கை கோர்த்த படி நடக்க ஆரம்பித்தான் மணிசங்கர்.பத்தடி நடந்திருப்பான்.திடீரென திரும்பி தாமோதரன் பக்கம் திரும்பினான்.தாமோதரன் ஹரிதாவை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.
அது வரை கண்களில் இருந்த காமம் மணிசங்கர் பக்கம் திரும்பியதும் வெறியாக மாறியது.மணிசங்கர் அவள் கைகளை அழுத்திப்பிடித்து கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

அன்று இரவு அவனுக்கு தூக்கமே வரவில்லை.தாமோதரனின் முகம் தான் நிழலாடிக்கொண்டிருந்தது.மறுநாள் அலுவலகம் நுழைந்ததும் தாமோதரனால் அழைக்கப்பட்டான்

குட் மார்னிங் மிஸ்டர் மணிசங்கர்
குட் மார்னிங் சார்
உங்களை ஹெட் ஆபிஸ்க்கு மாத்தலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.அடுத்த மாசத்துல இருந்து உங்களுக்கு 3,000 இன்க்ரிமென்ட்.கங்கிராட்ஸ்

கை குலுக்க நீட்டினான் தாமோதரன்

தேங்க் யூ சார்

தயக்கத்துடன் கைகுலுக்கி விட்டு கிளம்பினான் .அறைக்கதவை திறக்கும் போது அவனை தாமோதரன் கூப்பிட்டான்.

மணிசங்கர்
என்ன சார்?
அப்படியே போகும் போது ஹரிதாவை வரச்சொல்ல முடியுமா?

மணிசங்கருக்கு சுள்ளென்று ஏறியது அப்படியே தாமோதரன் பக்கம் திரும்பினான்.

எதுக்கு சார்?

இருவரும் ஒருவரை ஒருவர் வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அறைக்கதவை யாரோ தட்டுவது போல இருந்தது.இருவரும் திரும்பினார்கள்.

எக்ஸ்க்யூஸ் மீ

ஹரிதா எட்டிப்பார்த்தாள்.