Friday, July 24, 2009

அன்று மழை பெய்தது - 9

வாங்க ஹரிதா.

மணிசங்கர் நீங்க உங்க கேபினுக்கு போகலாம்.

மணிசங்கர் அவனை முறைத்துக்கோண்டே வெளியேறினான்.ஹரிதா அப்பாவியாக அந்த அறைக்குள் நுழைந்தாள்.அவன் கேபினுக்கு செல்லவில்லை.கையில் நடுக்கம் தெரிந்தது.சிகரெட்டை எடுத்துக்கொண்டு கம்பெனியை விட்டு வெளியேறினான்.திரும்ப வந்த போது ஹரிதா அவனுக்காக காத்திருந்தாள்

என்ன ஆச்சு?
ஒன்னும் இல்ல.
தம் அடிச்சியா?

அவன் பதில் சொல்லவில்லை.காதலிகளிடமே உண்டான கெட்ட பழக்கம் இது.காதலிச்சா தம் அடிக்க கூடாது.தண்ணி அடிக்க கூடது.சைட் அடிக்க கூடாது.சுருக்கமா சொன்னா ஒரு ஆணியும் புடுங்க கூடாது.

என்ன பதில காணோம்?
டென்ஷன்.உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்.
சொல்லு.

சாயங்காலம் பெசன்ட் நகர் பீச்சுக்கு போகலாம்

அவள் கல கலவென சிரித்தாள்.

இதுக்கு தான் இவ்ளோ டென்ஷனா?
இல்ல சாயங்காலம் சொல்றேன்.

அவளுக்காக பெசன்ட் நகர் கடற்கரை எதிரில் இருக்கும் பரிஸ்டாவில் காத்துக்கொண்டிருந்தான் மணிசங்கர்.இன்னும் கொஞ்ச நேரத்துல ஹரிதா வந்திருவா.அவ கிட்ட என்ன சொல்றது?எவ்ளோ சொல்றது என யோசித்துக்கொண்டிருந்தான்.அவன் முகத்தின் முன் கையை ஆட்டி அவன் சிந்தனையை கலைத்தாள் ஹரிதா.

என்ன ரொம்ப டல்லா இருக்க?
அதெல்லாம் இல்ல.
சும்மா சொல்லாத.காலையில் நான் உள்ள வந்தப்ப நீயும் மானேஜரும் ஏதோ சண்டை போட்டு கிட்டு இருந்த மாதிரி இருந்தது.
சண்டையெல்லாம் போடல. எனக்கு டிரான்ஸ்பர்.அடுத்த வாரத்துல இருந்து ஹெட் ஆபிஸ்.
என்ன திடீர்னு?
அவன் சரியில்லை ஹரிதா.
புரியல.யார சொல்ற?
தாமோதரன்.
இத்தனை நாளா ரவிகுமார திட்டிட்டு இருந்த.இப்போ இவரா?
அய்யோ உனக்கு புரியல.
உனக்கு தான் புரியல.ஹெட் ஆபிஸ் உனக்கு ப்ரோமோஷன் தானே?
வேலைல ப்ரோமோஷன கொடுத்துட்டு வாழ்க்கையில லே ஆஃப் கொடுக்க பாக்குறான்.
டையலாக் கேவலமா இருக்கு.

அவள் சிரித்தாள்.அவனுக்கும் அவளை கலவரப்படுத்த மனமில்லை.இன்னிக்கு
வேணாம் இன்னொரு நாள் சொல்லிக்கலாம்.

சரி அத விடு.
ஏதோ முக்கியமான விஷயம் சொல்லனும்னு சொன்ன?இது தானா?
இல்லை.
சரி அத சொல்லு.
ஐ லவ் யூ.

அவள் வாய் விட்டு சிரித்தாள்.இது தான் அவ கிட்ட அவனுக்கு ரொம்ப பிடிச்சது.
எந்த உணர்ச்சியையும் மறைக்காம அப்படியே வெளிய காட்டிடுவா. அவளுக்காக வாங்கி வைத்திருந்த மொபைலை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.

என்ன இது?
ஒரு சின்ன கிஃப்ட்.
எதுக்கு?
சும்மா தான்.
சரி ஆனா ஒரு கண்டிஷன்.பர்த் டே க்கு வேற கிஃப்ட் தரனும்
கண்டிப்பா தர்றேன் போதுமா?
ஒகே.

அவள் மொபைலை எடுத்துக்கொண்டாள்.அவள் தெருமுனை வரை பேசிக்கொண்டே வந்தாள்.அவன் இப்போதே தலையாட்டி பழகத்தொடங்கினான்.

நிறுத்து.இங்கயே இறங்கிக்கிறேன்.
ஏன் வீட்டுலயே இறக்கி விடுறேனே?
எதுக்கு நான் வேலை பாக்குறது உனக்கு புடிக்கலயா?
கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கெல்லாம் போகக்கூடாது.
இவ்ளோ கண்டிஷன் போட்டா உன்னை கல்யாணம் பண்ணிக்கிறத பத்தி யோசிக்க வேண்டியிருக்கும்.
அடி.

செல்லமாக கோபித்துக்கொண்டு திரும்பினாள்.அவனும் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

ஒய்
என்ன?
உனக்கு ஒரு கிஃப்ட் வாங்கி வச்சிருக்கேன்.
என்ன?

அவள் ஹேன்ட் பேக்கை துழாவத்தொடங்கினாள்.

கண்ண மூடு குடுக்குறேன்.

தலையாட்டிக்கொண்டே கண்ணை மூடினான்.அவள் அவசரம் அவசரமாக அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு விலகி நின்றாள்.அவன் திகைப்புடன் கண்ணை திறந்தான்.அவனை பார்த்து கண்ணடித்து விட்டு திரும்பி நடந்தாள்.

ஹரிதா
என்ன டா?
தாமோதரன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு.நான் சொல்றது புரியுதுல்ல?
அய்யோ புரியுது.

அலட்சியமாக சொல்லி விட்டு அவள் ஏதோ பாடலை முனுமுனுத்த படி நடக்கத்தொடங்கினாள்.

முதல் காதல்.முதல் முத்தம்.முதல் சிகரெட். இது மூன்றையும் ஒரு மனிதனால் எப்போதும் மறக்க முடியாது.அவை ஆசிர்வதிக்கப்பட்ட தருணங்கள்.அவள் வீடு போகும் வரை நின்று பார்த்துக்கொண்டிருந்தான்.
கிளம்புவதற்கு முன் தெருவை சுற்றி நோட்டம் விட்டான்.

யாருக்கு தெரியும் அந்த தாமோதரன் ****** இங்க தான் எங்கயாச்சும் சுத்திட்டு இருப்பான்.

அதே யோசனையுடன் வீடு திரும்பினான் மணிசங்கர்.அவன் வீட்டு வாசலில் தாமோதரன் நின்று கொண்டிருந்தான்.