Monday, January 9, 2012

காலன் காலிங்- 4


வாழ்க்கையில் நாம நினைக்குறது எப்பவுமே நடக்குறது இல்லைனு அன்னிக்கு தான் நான் புரிஞ்சுக்கிட்டேன். அர்த்தம் இல்லாததா கூட இருக்கலாம் ஆனா அன்னிக்கு என் வாழ்க்கையே முடிஞ்சதுனு நினைச்சேன்.அப்படி நடக்கல. ரெண்டு விஷயம் என்னை காப்பாத்துச்சு.
முதலாவது, என் அப்பா கிட்ட ஓரளவு பணம் இருந்தது அதுவும் போலிஸ் காரங்க வாயை மூடுற அளவுக்கு 2. ரெண்டாவது இறந்து போன ஆளோட மனைவி. சின்ன பையன்னு என்னை மன்னிச்சது மட்டுமில்ல ஒரு பைசா பணத்தை கூட அவங்க தொடலை. அவங்க எதுக்கு என்னை மன்னிக்கனும்?

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்"

இந்த திருக்குறளை நான் அனுபவபூர்வமா தெரிஞ்சுகிட்டேன்.

வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசாதீர்
எதிர்முனையில் அழைப்பது காலனாகவும் இருக்கலாம்.

சாலையோரம் இருக்கும் ஹோர்டிங்கள் எனக்காகவே எழுதின மாதிரி இருந்தது. சின்ன சின்ன விஷயங்கள் தான் ஆனா இதை தெரிஞ்சுக்கிறதுக்கு நான் கொடுத்த விலை ரொம்ப அதிகம். ஆமா விலை ஒரு உயிர்.

சில மாதங்களுக்கு பிறகு...........

இப்போ நான் லைசன்ஸ் எடுத்துட்டேன். போன வாரம் மதுவை பக்கத்துல் உட்காரவைச்சு ஓட்டினேன் . என்னிக்காவது ஒரு நாள் எனக்கு தைரியம் வரும் போது அந்த அம்மாவை பாக்கனும்.  இன்னிக்கு காலையில வெங்கடாசலத்தை பாத்தேன். இப்போ அவன் பெட்ரோல் பங்க்ல வேலை பாக்குறான். என்னை பாத்ததும் திகைச்சு நின்னான் உடனே சுதாரிச்சுட்டு பேசனும்னு சொன்னான்.

மன்னிச்சுக்க தம்பி.
எதுக்கு நா?
நீ செல்போன் பேசுனதை நான் சொல்லிருக்க கூடாது.பயத்துல சொல்லிட்டேன்.
பரவாயில்ல விடுங்க.
என் மேல கோபம் ஒன்னும் இல்லையே?
புருஷனை கொன்னவனை மன்னிக்குறவங்க இருக்கும் போது இதை நான் ஒரு விஷயமா கூட எடுத்துக்ககூடாது.
அவ எப்பவுமே அப்படி தான் தம்பி. சரி நான் வர்றேன்.

வெங்கடாசலம் கிளம்பி விட்டான். நானும் தான். ஆனால் மனதின் ஓரம் ஒரு கேள்வி.


எதுக்கு சம்பந்தமே இல்லாம இத்தனை நாள் கழிச்சு மன்னிப்பு கேக்குறான்? அவ எப்பவுமே அப்படி தான் .அப்போ அவங்களை வெங்கடாசலத்துக்கு முதல்லயே தெரியும். அதை சொன்னப்ப அவன் மூஞ்சியில இருந்த சோகம் அன்னிக்கு அவனோட காதல் தோல்விய சொல்லுறப்ப இருந்த அதே சோகம். மை காட் அவங்க தான் வெங்கடாசலம் காதலிச்ச பொண்ணு.


ஸிட். அன்னிக்கு என்ன நடந்துச்சு? நான் தான் ஆக்சிடன்ட் பண்ணேனா? ஏன்னா உங்களுக்கு தெரியும்ல டிரைவிங் ஸ்கூல் வண்டியில ரெண்டு பக்கமும் ஆக்ஸிலரேட்டர், பிரேக் இருக்கும்னு?
 
                                                             முற்றும்.
                                                                                                                          என்றும் அன்புடன்,
                                                                                                                           ச.கார்த்திகேயன்.