Saturday, May 19, 2012

கொள்ளிவாயனும் உடைந்த சத்தியங்களும்!!



பகுதி-1:ஒரு இரவின் கதை

மூன்று அடுக்குகளும் நானுற்றி இருபது அறைகளும் கொண்டது அந்த தனியார் பொறியியல் கல்லூரியின் ஆண்கள் விடுதி. இரவு பனிரெண்டு மணிக்கும் அனைத்து அறையிலும் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. பெரும்பாலான மாணவர்கள் பரபரப்புடன் படித்துக்கொண்டிருந்தனர். படிப்பு தலையில் ஏறாதவர்கள் கடமைக்கு புத்தகத்தை கையில் வைத்திருந்தனர். சிலரோ எந்திரன் ரஜினி போலவும் படிக்க முயற்சித்துக்கொண்டிருந்தனர். அந்த பெரிய விடுதியில் இரண்டு அறைகளில் மட்டும் வெளிச்சம் இல்லை. ஒன்று,மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டதால் இரண்டு வருடங்களாக மூடியிருக்கும் அறை.இரண்டாவது அறையில் தான் கதிரவன் இருந்தான்.இருட்டில் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பான் என்று அவனுக்கே தெரியவில்லை.கதவு அருகில் யாரோ வருவது போல இருந்தது. அவனாக தான் இருக்கவேண்டும். வேகமாக கதவை திறந்தான். அவனே தான்! கார்த்திக்.


மச்சான் ஒருத்தன் கிட்ட கூட இல்லையாம்.


இருந்தாலும் கொடுக்கமாட்டானுங்க.


நீ கொடுப்பியா?காலையில பரீட்சைய வைச்சுகிட்டு நீ கொடுப்பியா?


கதிரவன் இல்லையென தலையசைத்தான்.


இப்படி ஆகும்னு நான் நினைக்கல கார்த்தி. இன்னும் ரெண்டு பில்டர் வாங்கியிருந்தா சரியா இருந்திருக்கும்.


பேசாத எனக்கு பைத்தியம் பிடிக்கப்போகுது


சிகரட் சரி ஒரு பீடி கூடவா கிடைக்கல


கட்டை பீடி கூட கிடைக்கல. கினமெடிக்சாவது!மண்ணாவது! நான் தூங்கப்போறேன். நாளைக்கு உனக்கு என்ன?


டி.எஸ்.பி


தேவி ஸ்ரீ பிரசாத்தா? 


ரொம்ப கேவலமான மொக்கை. டிஜிட்டல் சிக்னல் பிராஸசிங். அதுக்கு இன்னொரு பெயர் டிகிரி ஸ்டாப்பிங் பேப்பர்.


அப்போ நீயும் கான்வக்கேஷன்ல டிகிரி வாங்கப்போறதில்ல . குட் நைட் மச்சி.


கார்த்திக் போய்விட்டான் ஆனால் கதிரவனுக்கு தூக்கம் வரவில்லை. கண்ணை மூடினால் ஸ்வாதியின் நியாபகம் வந்தது. ஸ்வாதியும் அவனும் ஒரே வருடம் தான் கல்லூரியில் சேர்ந்தனர். அந்த பேட்சிலே அழகான பெண் அவள் தான். அதனால் அவளுக்கு ஒரு ரசிகர் மன்றமே உருவானதில் ஆச்சரியம் இல்லை ஆனால் அந்த கூட்டத்தில் கதிரவனும் சேர்ந்தது அவனுக்கே ஆச்சரியம் தான். அவளோ இவர்களில் ஒருவனை கூட இன்று வரையில் மனிதனாக கூட பார்த்ததில்லை.

ஸ்வாதி அவனை பார்த்து மயங்குவதற்க்கு அவனிடம் ஒன்றுமில்லை என்று அவனுக்கே தெரியும். படிப்பு முடியும் முன் ஒரு வேலை கிடைத்து விட்டால் அவளிடம் காதலை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாவது கிடைக்கலாம்.

"ஹலோ ஸ்வாதி நான் கதிரவன். பைனல் இயர் ஐ.டி . ஒரு அரியர் வைச்சுருக்கேன் . நான் உன்னை நாலு வருசமா காதலிக்குறேன்".


"ஹலோ ஸ்வாதி நான் கதிரவன். பைனல் இயர் ஐ.டி . முடிச்சவுடனே டி.சி.எஸ்'ல ஜாய்ன் பண்றேன். நான் உன்னை நாலு வருசமா காதலிக்குறேன்".

இந்த இரண்டையும் சொல்வதிலேயே வித்தியாசம் தெரிகிறது அல்லவா? காதலை வெளிப்படுத்த ஒரு வேலை வேண்டும். வேலை கிடைக்க அரியரை க்ளியர் பண்ணவேண்டும் அதற்கு படிக்கவேண்டும். அதற்கு கண்முழிக்க வேண்டும். இளைய தளபதி சொன்னது போல் வாழ்க்கை வட்டமாக தான் இருக்கவேண்டும். எதை சிந்தித்தாலும் மனம் இறுதியில் ஒன்றை தான் சுற்றிக்கொண்டிருந்தது. ஒரு சிகரெட். வெறுப்புடன் மெத்தையில் புரண்டபோது தான் தலையனை அடியில் வைத்த கடவுள் படம் கையில் சிக்கியது.

கடவுளே ஒரு சிகரெட்டோ பீடியோ இன்னிக்கு கொடு . நாளையிலிருந்து இந்த கருமத்த விட்டுடுறேன். இது நான் நாளைக்கு எழுதப்போற பரீட்சை மேல, எனக்கு கிடைக்கப்போற வேலை மேல,ஏன் என் காதல் மேல கூட சத்தியம்.

அவனுக்கே சிரிப்பாக தான் இருந்தது. பீடி கொடுக்க கடவுள் என்ன ஹாஸ்டல் வாட்ச்மேனா?

மூஞ்சி கழுவிவிட்டு வரலாமென தோன்றியது அவனுக்கு. பாத்ரூம் அருகே விடுதியை சுத்தம் செய்யும் பணியாளர்கள் எவ்வித கவலையுமின்றி உறங்கிகொண்டிருந்தனர். அதில் ஒருவனது மேல் சட்டை பாக்கெட்டில் இரண்டு பீடிகள் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. சுற்றிலும் ஒருமுறை பார்த்தான் கதிரவன் அந்த காரிடரில் அவனைத்தவிர வேறு யாருமில்லை. கை செய்யப்போகும் வேலையை நினைத்து மனமும் நடுங்கியது. நாளைய இந்தியாவின் தூண் ஒரு பீடிக்காக தவறு செய்யலாமா? என மண்டைக்குள் கேள்வி கிளம்பியது. தலையை தட்டிவிட்டு தன் வாழ்வின் முதல் திருட்டை செய்தான் அவன். பீடி கைக்கு வந்தவுடன் விடுவிடுவென அறைக்கு சென்று தாளிட்டான். பீடியை வாயில் வைத்து தீக்குச்சியை பற்ற வைத்தபோது மனம் சொல்லியது " பீடியின் வெளிச்சம் வாழ்க்கையிலும் சீக்கரமே வரும்".